Friday, December 29, 2006

கனிமொழி.

சமீப காலமாக, பத்திரிக்கைகளில் அதிக அளவில் தென்படுகிறார், கனிமொழி அவர்கள். ஈழப் பிரச்சனை, கவிதை, நீதி மன்றங்களில் தமிழ் மொழி, கருத்து இணைய தளம் என்று ஏதோவொரு செய்தி , அவர் பெயரும் படமும் தாங்கி, வந்தவன்னம் உள்ளது.

இவையெல்லாம், அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு ஆவலை என்னுள் உருவாக்கி உள்ளது. நான் அறிந்தவரையில், அவர் ஹிந்து நாளேட்டில் சிறிது காலம் பனியாற்றினார் என நினைக்கிறேன். கவிதாயினி என்று தெரியும், ஆனால் அவரது கவிதைகளை படித்ததில்லை. அவரது வேறு முகங்கள் எனக்குத் தெரியாது.

ஆனால், முக்கியமாக நான் சொல்ல வருவது யாதெனில், அவருடைய புகைப்படங்களை பார்க்கும் பொழுது, ஒரு வசீகரம் தெரிகிறது. முன்னாள் முதல்வர் திரு.ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்களை பார்க்கும்பொழுதும் எனக்கு இவ்வாறு தோன்றியுள்ளது.

கனிமொழி அவர்கள், பெண்களுக்காக ஒரு இயக்கம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கனிமொழி அவர்கள், அப்படி ஒரு இயக்கம் தொடங்கினால், அவரது வசீகரத்தால் நிச்சயமாக மிகப் பெரும்பான்மையான
பெண்கள் கவரப்படுவார்கள் என்பது நிச்சயம்.

அதனால், ஜெயலலிதாவிற்கு பெண்களிடம் இருக்கும் ஆதரவில் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டு, தி.மு.க விற்கு சற்றே பலம் கூட வாய்ப்புள்ளது என்பது இந்த பாமரனின் எண்ணம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

மருத்துவர்; ஐயாவா? புடிங்கியா?

நமது சமூகத்தில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வாழ்வில் முக்கியமானவற்றை வகைப்படுத்திச் சொல்வார்கள்.எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இருந்து வந்தது. இந்த வரிசையில் மருத்துவரை ஏன் சேர்க்கவில்லை? என்பதுதான் அது.

தமிழ் சினிமாவில்,....... டாக்டர் உசுர காப்பாத்தி குடுத்திட்டீங்க, நீங்க கடவுள் மாதிரி,......... போன்ற வசனங்களை கேட்டதன் தாக்கத்தால், இந்த கேள்வி என்னுள் உருவாகி இருக்கலாம்.

ஏன் சேர்க்கவில்லை என்பதைவிட, சேர்க்காமல் விட்டதே நல்லது என்று நினைக்கிறேன். மருத்துவர்கள் அடிக்கும் கொள்ளையை பார்த்தால்
இவர்களை எப்படி தட்டிக்கேட்பது என்றே தெரியவில்லை.

எனது மகனுக்கு டான்சில் பிரச்சனை உள்ளது. அதை கட்டுக்குள் வைக்க மருந்தும் உண்டு வருகிறான்.ஆனால் வேறு ஒரு குறைபாட்டிற்காக ஒரு புகழ் பெற்ற சொறியன் டாக்டரின் மருத்துவமனைக்கு போனபோது,
டான்சில் பிரச்சனை மிக அதிகமாகி, காது மூக்கு தொண்டை எங்கும் பாதிப்பு ஏற்படுத்திவிட்டதால் உடனடியாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பயம் காட்டினார்கள்.அவர்கள் காட்டிய வேகம் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்களிடமிருந்து தப்பித்து வந்து, வேறு ஒரு டாக்டரிடம் சோதனை செய்தோம். அதில் அவர்கள் சொன்ன அத்தனையும் பொய் என்று நிரூபமானது.

எந்த ஒரு சின்ன பிரச்சனைக்காக டாக்டரிடம் சென்றாலும்
குந்தானி டெஸ்ட், குந்துமனி டெஸ்ட் என்று பணம் புடுங்குவதிலேயே குறியாய் உள்ளவர்களாக நம் மருத்துவர்கள் மாறி நிறைய காலம் ஆகிறது.

இப்போது , பணம் புடுங்க அவர்கள் கைக்கொள்ளும் புதிய தந்திரம், தேவையில்லாத அறுவைசிகிச்சை.

மக்களே, இந்த மருத்துவப் புடுங்கிகளிடம் உஷார்.....உஷார்.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Monday, December 25, 2006

AN APPEAL TO TN GOVERMENT.

THIS IS AN APPEAL ON BEHALF OF TAMILS WORKING IN FOREIGN SOIL.

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அடுத்த ஆண்டு, இவ்வெண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழர்கள் முதலிடம் வகிப்பார்கள் எனவும் தெரிகிறது. வெளிநாட்டு வேலை என்றாலே ஏஜன்டுகள் தொல்லைதான். போலி ஏஜன்டுகளால் தமது வாழ்நாள் சேமிப்பையும், வாழ்க்கையையும் தொலைத்தவர்கள் ஏராளம்.

1.வெளிநாட்டு வேலைக்காக ஆள் எடுப்பதையும், அனுப்புவதையும், தமிழக அரசாங்கமே ஒரு அமைச்சகத்தை உருவாக்கி செம்மையாக நடத்தலாமே.

2. இதை கட்டண அடிப்படையில் கூடச் செய்யலாம்.

3.இந்த மாதிரி விஷயங்களை கண்கானிக்க அரசாங்கத்தில் ஒரு அதிகாரியோ/அமைப்போ உண்டா என்ற விவரங்கள் தெரியவில்லை. அப்படி யாரும் இருந்தால் அதைப்பற்றி ஒரு பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களிடம் செய்ய வேண்டியது மிக அவசியமாய் உள்ளது.தமிழக அரசு ஆவன செய்யுமா?.

தாயகத்தில் இருந்து நாலாயிரம் கிலோமீட்டர்தொலைவில், நாதியத்துக் கிடக்கும்போது, தமிழன், இந்தியன் என்றெல்லாம் நினைத்து பெருமை கொள்ள முடியவில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, December 16, 2006

தேன்கூடு போட்டி-குறும்பு/வெக்கப்போரு.

வணக்கம்மா, எம் பேரு முரளி, சாரதா பாட்டியோட பேரன், ஆத்தாள பாக்கலாம்னு வந்தேன்.

சாரதா மாமி பேரனா, அட உள்ள வாங்க தம்பி....டேய் மொச்ச, அந்த ஸ்டூல கொண்டாந்து போடுறா. உட்காருங்க தம்பி. என்ன சாப்புடரிங்க; மோரா, காபியா?.

இல்லம்மா ஒன்னும் வேனாம்.


ஏன்? எங்க வூட்ல எல்லாம் சாப்புடமாட்டிங்களோ!.

ஐய, அப்படில்லாம் இல்லீங்க. ஆத்தா ஊட்டி வுட்டு நிறைய சாப்டுருக்கேன். கொளஞ்சி மாமாவக் கேட்டுப் பாருங்க, சொல்லுவாரு.

சும்மா தமாஷ் பன்னம்பா. மொச்சயோட அப்பா சொல்லி இருக்காரு உங்களப்பத்தியெல்லாம். அவரு எங்க மாமியார கூட்டிகிட்டு டாக்டர் வூட்டுக்கு போயிருக்காங்க, திரும்பி வர்ர நேரம்தான்.

அது என்னங்க மொச்ச..ன்னு கூப்புடரிங்க பையன? டேய் உம் பேரு என்னாடா?.

சதீஷ்............என்னாது சதீஷா?.

இல்லங்க சகீஷ்.......என்னாது சகீஷா?.

என்னங்க பேர் புதுமையா இருக்கே!.அப்படின்னா என்னா அர்த்தம்.

யாருக்கு தெரியும். திருச்சி ஜமால் முகம்மது காலேஜ்ல படிக்கும்போது எங்க ஊட்டுக்காரரோட க்லோஸ் பிரண்டு, சகீருதின்..னு பேராம். எல்லாம் சகீஷ்-னு கூப்புடுவாங்களாம். அவங்க அப்பா மலையாலமாம், அம்மா தமிழாம். அவரும் எங்க வூட்டுக்காரர் மாதிரியே பெரியார் கட்சியாம். மலேசியாவுல இருந்தாராம் அப்பறம் சிங்கப்பூர்ல இருந்தாராம். இப்ப சவுதில இருக்காராம். அவரு ஞாபகமா எங்க வூட்டுக்காரரு சகீஷ்-னு பேர் வச்சுட்டாரு. எங்க மாமனாரு இமயவரம்பன் -னு பேர் வச்சுருக்காரு. எங்க அத்த சின்னகருப்பு-ன்னு கூப்புடுவாங்க.

நீங்க மொச்சன்னு கூப்புடிவிங்களாம். மொத்தத்துல சகஸ்ரநாமம் -னு சொல்லுங்க. அது சரி அது என்னாங்க மொச்ச?.

ஒரு நா, அத்தனை பேருக்கும் மொச்ச பயிரு அவிச்சு வெச்சிருந்தேன். இவன் யாருக்கும் தெரியாம ஒரு குண்டாம் பயிற ஒத்த ஆளா தின்னுப்புட்டாங்க. தின்னது பரவாயில்ல, மறு நா முச்சூடும் ஒரு வாயு மண்டலம் உருவாக்கினாம் பாருங்க....வூட்டுக்குள்ள யாரும் உட்கார முடில....ஹா..ஹா..ஹா...ஹா. அன்னிலேந்து மொச்ச ஆயிட்டாரு.

உங்க கண்ணாலத்துக்குதான் வர முடியாம போச்சு. நீ புள்ளையோடயே வந்துட்ட. குடும்பத்தோட முத முறையா வந்திருக்கிங்க, இருந்து சாப்டுதான் போனும்.

யம்மா மருமவளே, என்ன சமைக்கட்டும் சொல்லு.

எது வேனாலும் செய்யுங்க.

இதப் பாருடா, உஞ் சம்சாரத்தோட பதில. சரி கருவாட்டு குழம்பு வச்சிரட்டுமா?.

கொளஞ்சி மாமா எனக்கு மீன் வூட்டி வுட்டாரு. நீங்க எம்பொஞ்சாதிக்கு கருவாட்டு குழம்பா!. சரிதான், பேசாம ஒரு கடா வெட்டிப்புடுங்க; எம் புள்ளைக்கும் சேர்த்து கறி சோறே ஊட்டி விட்டுரலாம். ஹா...ஹா....ஹா என்ற எங்கள் சிரிப்பை சிதற அடித்தது ஆத்தாவின் வெங்கலக்குரல்.

எலேய் வெக்கப்போரு, எப்படா வந்த, வாடா வா என்று என் கன்னத்தை வழித்து எடுத்து தன் நெற்றிப்பொட்டில் சொடுக்கெடுத்தாள் ஆத்தா. வெக்கப்போரு, இந்த ஆத்தால ஞாபகம் வச்சுக்கினு பாக்க வந்தியாடா, என்ற ஆத்தாவின் கண்ணும் எனது கண்ணும் சேர்ந்து கலங்கியது.

கொண்டா கொண்டா, உம் மவனக் கொண்டா என்று என் மகனை வாரி அனைத்துக் கொண்டாள். ஆத்தாவின் குரலும், உருவமும் ஏற்படுத்திய கிலியில் எனது மகன் அழ ஆரம்பித்து விட்டான்.

என்னாடா உம் மவன் இப்புடி சினுங்குரான். எலேய் உங்கப்பன் வக்கப்போரு கணக்கா இருக்கனும்டா. குறும்புக்காரன் புள்ள அழுமூஞ்சியா இருக்கலாமாடா.

நான் - ஆத்தா அவன இப்ப இறக்கி விட்டா, வீட்ட ரெண்டாக்கிடுவான். வரும்போது அவங்க அம்மாக்கிட்ட அடி வாங்குனதால சினுங்கிட்டு இருக்காரு. அடிக்கடி புள்ளைய போட்டு அடிச்சிபுடுது ஆத்தா, நீங்களே கேளுங்க.

என் மனைவி - ஆங், மண்ணு தின்னா அடிக்காம வேற என்ன பன்னுவாங்களாம்.

ஆத்தா - மண்னு தின்னா; கின்னுன்னு வளரும் புள்ளைங்க. பச்ச புள்ளைய போட்டு அடிக்காத.

என் மனைவி - கிருஷ்ணர் வெண்ண தின்ன மாதிரி, புடி புடியா மண்ண அள்ளி திங்குறான் ஆத்தா. இவரு, அவனை அதட்டாம....வேடிக்கப் பார்த்ததும் இல்லாம......அங்க பாருடி, கல்லையெல்லாம் பொறுக்கி எடுத்து தனியா வச்சிட்டு, என்ன அழகா மண்ணு திங்கறாம் பாருன்னு, அத ரசிச்சுகிட்டு வேற உட்காந்துகிட்டு இருக்காரு. இந்த மாதிரி மண்ணு தின்னா வயித்துல பூச்சி வந்துடும். அப்பறம் இரத்த சோகைதான், அதான் நாலு சாத்து சாத்தினேன்.

ஆத்தா - அதுசரி, நீ சொல்ரத பார்த்தா நீ சாத்துனது உம் புள்ளையா மட்டுமா!! இல்ல வூட்டுக்காரனையும் சேத்தா.

என் மனைவி - ம்க்கும்....இவர யாரு சாத்துரது. இவரப் பத்தி உங்களுக்குத் தெரியாதா என்ன?. அடுத்தவங்கள பார்வையாலேயே மெரட்டுர ஆளு. ஒரு பார்வை; ஒரு சொல்லு போதும், அப்படியே கத்தியால கிழிக்கிற மாதிரி.

ஆத்தா - என்னடா என் பேத்திய மெரட்ரியாமே. இனிமே மிரட்டுனா எனக்கு ஒரு போன் போட்டுச் சொல்லு, நான் பாத்துக்கிறேன், இந்த வெக்கப்போரு பயல.

என் மனவி - அது என்னங்க ஆத்தா?. வெக்கப்போரு...வெக்கப்போருன்னு சொல்ரிங்க?.

ஆத்தா - பய இது வரைக்கும் உங்கிட்ட விஷயத்தையே சொல்லலயா. இவன் ஆறு வயசுப் பயலா இருக்கும்போது, இவன் மாமன் அ..னா..ஆ..வன்னா எழுதிக்காட்டச் சொல்லியிருப்பான் போல. அலமாரி உசரத்துல இருந்த சிலேட்ட, பயலால எடுக்க முடியல. மாமன் பூஜைய முடிச்சுட்டு வந்தா, அடிச்சிருவான்னு பயந்துகிட்டு, எங்கயோ ஓடிப் போய் ஒழிஞ்சுகிட்டான்.

எங்க யாருக்கும் இந்த விஷயம் தெரியல. புள்ளையக் காணலையேன்னு, அத்தன பேரும் அதுந்து போய்ட்டோம். தெருவே சேந்து புள்ளய தேடுது. வள்ளலார் சபைக்கு நடந்து போயிட்டானோன்னு, அங்க ஒரு கும்பல் தேடி ஓடுது. ரயில் ஏறி போய்ட்டானோன்னு, ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் ஒரு கும்பல் விசாரனை நடத்துது. சபைக்கு சோறு துன்ன வந்த பண்டாரப் பரதேசி எவனும் புள்ளயக் கூட்டிகிட்டு போய்டானோன்னு, கண்ணுல பட்ட பிச்சக்காரப் பசங்ககிட்டல்லாம் ஒரு கும்பல் விசாரனை நடத்துது. கிணத்துல ஏதும் விழுந்துட்டானோன்னு, சில பசங்க தண்ணிக்குள்ள கரனம் அடிச்சி, கிணறு முச்சூடும் தேடிப் பாத்துட்டாங்க.

அதுக்குள்ள இவங்க அப்பனுக்கு தகவல் போயி, அவரு நெய்வேலிலேந்து, பயர் வண்டி, ஜீப்புன்னு கூட்டாளிங்களோட வந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி, ஊரையே அமர்களப்படுத்திகிட்டு இருந்தாரு.

இவனோட சித்தி, பாட்டி, அம்மா எல்லாரும் ஒப்பாரி வெச்சு ஊரக் கூட்டிகிட்டு இருக்காங்க. ஊருல இருக்கர அத்தன கோயிலுக்கும், உலகத்துல இருக்கர அத்தனசாமிக்கும் வேண்டுதலை போயிகிட்டு இருக்கு.

அப்ப நான் கிணத்தடிக்கு போயிருந்தேன். சில நேரம் இவன் மாட்டுகொட்டால கன்னுக்குட்டியோட விளையாடிகிட்டு இருப்பான். அதனால சந்தேகப்பட்டு அங்க போயி பாத்தேன். அப்ப வெக்கப்போரு ( வைக்கோல் அடுக்கு ) உள்ளேர்ந்து எதோ சர சரன்னு சத்தங் கேட்டுது. நான் கூட ஏதாவது நல்லதோ, சாரையோ கிடக்குதோன்னு பயந்து போயிட்டேன். கொஞ்சம் உத்துப் பாத்தா, இவனோட சட்டை தெரியுது. வைக்கப்புல்ல வாரி மேலப்போட்டுகிட்டு, உள்ள ஒழிஞ்சுக்கினு கிடந்தான்.

அன்னிக்கு இவன் வாங்கினாம் பாரு அடி, நாலு புளியஞ்சிம்பு முறிஞ்சிப்போச்சுன்னா பாத்துக்கோயன். அதுக்கப்பறம், இவன நெய்வேலிக்கு கூட்டிகிட்டு போய்ட்டாங்க. ஆனால் எப்ப வந்தாலும், வெக்கப்போரு வெக்கப்போருன்னு கூப்புடர இந்த பாட்டிய மட்டும் பாக்காம போமாட்டான் எம்பேரன் என்ற ஆத்தாவின் கண்களில் பாசம், எனது நினைவில் கடந்த காலம்.

இப்போதும் குறும்பு மேலிடும் தருனங்களில், என் மனைவி என்னை அழைப்பது....ஏ...ஏ..வெக்கப்போரே..ரே..ரே.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Tuesday, December 12, 2006

வெறி பிடித்த தி .க.

திருச்சியில் ஈ.வே.ரா.சாமி சிலை தூள் தூளாக்கப்பட்டதால், தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி உள்ளது,வெறி பிடித்த தி .க. அப்பாவிகள் மேல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இவனுங்க பெட்ரோல் குண்டு போட்ட நேரத்துல, அயோத்யா மண்டப கோயில்ல, நல்ல வேளையா, சொற்பொழிவு எதுவும் நடக்கல. இல்லன்ன நினச்சு பாக்கவே நடுங்கும் மாதிரியான சம்பவம் நடந்திருக்கும்.

மஞ்ச துண்டு மஸ்தான், இதை கண்டிச்சு ஒரு அறிக்கை விடலையே. ஆசியப் பெரும் பணக்காரர் ஆன சொகுசுல தான் அனைத்து தமிழக மக்களுக்கும் முதல்வர் என்பது மறந்துடுச்சா.

திராவிடக் கழக திருட்டு நாத்திக கூட்டம் இதுவரை தமிழகத்தில் வளர்த்த ஜாதி,இன,மொழி,பிராந்தீய வெறிகள் போதாது என்று புதிதாக கொலை வெறியோடு, வெறிபிடித்த நாயைப்போல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெறிபிடித்த நாயை என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

JAI GURU DEV.

HAPPY BIRTHDAY.

HAPPY BIRTH DAY TO YOU; HAPPY BIRTHDAY TO YOU,
HAPPY BIRTH DAY TO MY REAL SUPER STAR; MY WIFE.
GOD BLESS YOU MY DEAR.
WITH LOVE,
B. MURALI DARAN.

Thursday, November 30, 2006

நான் ஜாதி வெறியனா!!!

நான் மிக மதிக்கும் நபர் ஒருவரை இரு நாட்களுக்கு முன் சந்தித்தபொழுது, எனது எழுத்துக்களில் சாதி வெறி மேலோங்கி இருப்பதாக இனைய நண்பர்கள் பேசுவதாக குறிப்பிட்டார். நான் அப்படியெல்லாம் வெறி பிடித்தவன் இல்லை என்று உடனடியாக அவருக்கு மறுப்பு தெரிவித்திருந்தாலும், ஏனோ மனதிற்குள் ஒரு உறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆகவே சில விளக்கங்களை அளிப்பது என்று முடிவெடுத்தேன்.

நான் இனையத்தில் ஜாதி பேசியிருந்தால் அது ஒரு எதிர் வினையாக மட்டுமே இருந்திருக்குமே அன்றி மேல்ஜாதி மனோபாவ சிந்தனை வெளிப்பாடாக நிச்சயம் இருந்திருக்காது. ஒரு புழுவைக் கூட குச்சியால் குத்தினால் சிறிது எதிர்ப்பைக் காட்டும். இதை தவறென்று யாராலும் மறுக்க முடியுமா?. அதே போன்றதொரு அறச்சீற்றம்தான் எனது எதிர்வினை.

என்னுடைய பார்வையில் வெறியர்கள் என்றால் அது இறைமறுப்பாளர்கள்தான். இவர்கள் தூவிய விஷ வித்துக்களால் கிளர்ந்தெழுந்த பார்ப்பனீய எதிர்ப்பு என்னும் பார்த்தீனிய கருத்தால் நேரடியாக பல முறை பாதிக்கப்பட்டவன் நான். எனவே எனது எதிர்வினை சற்றே வலுவானதாக இருந்திருக்கலாம்.

நான் மரணத்தில் இருந்து வாழ்க்கையை பார்ப்பவன். இன்னிக்கி செத்தா நாளைக்கு பாலு, அந்த பாலும் நமக்கானது இல்லை. என்னைக் கேட்டால் மனிதன் கடவுளை பற்றி சிந்திப்பதை விட மரணத்தைப் பற்றி சிந்தித்தால் சீக்கிரமே பதப்படுவான்.

எனது லட்சியம் தேடல்தான். சிறிது காலம் நாத்திகனாகவும் வாழ்ந்திருக்கிறேன். எனது அனுபவத்தில் நாத்திகவாதம் மிக சுலபமானதும் முட்டாள்தனமானதும் என்று புரிந்து கொண்டேன். அது வெறும் வறட்டுக் கேள்விகளால் நிரம்பிய உலகம். எந்த அனுபவப் புரிதலையும் தராதது. அதனால் நிச்சயம் மனிதனின் மனதில் அன்பு வளர்க்க முடியாது. நாத்திகத்தால் வெறுப்பைத்தான் வளர்க்க முடியும். அதைத்தான் நாம் இன்று தமிழகத்தில் கண்கூடாக கண்டு வருகிறோம்.

பிராமனீயம் என்ற சீரிய ஓடு தளத்தில் இருந்து கிளம்பியதால் முரளீதரன் என்ற விமானத்தின் பயனம் உலகப் பெருவெளியில் அர்த்தமுள்ளதாகவே உள்ளது. ஆனால் நான் ஞானி ஒன்றும் இல்லையே அப்படியே கீழிறங்காமல் உயரவே பறந்துகொண்டு இருப்பதற்கு. நான் சம்சாரி ஐயா, கீழிறங்கித்தானே ஆகவேண்டும்.

அப்படி இறங்க நினைக்கையில், இறங்கு தளத்தில் சில நாடோடிகள் ஆபாசக் குப்பைகளை கொட்டி வைத்திருப்பதையும் ( கார்த்திகை மாசத்து நாய் போல் இவனுக்கு எப்போதும் துருத்திக்கொண்டே இருக்கும் போல), சில கருப்பு பூனைகள் குறுக்கே ஓடுவதையும், சில காட்டான்கள் ஒடு தளத்தை களத்து மேடாக மாற்றி வைத்திருப்பதையும் பார்க்கும் பொழுது, எதிர்வினை புரியாமல் இருக்க முடியவில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, November 25, 2006

வாரியார் சுவாமிகள்.

வேலூர் அருகில் உள்ள ரத்னகிரி மலையில் உள்ள முருகப் பெருமானை தரிசிக்க சென்றிருந்தோம். சிறிய மலையாய் இருந்தாலும், மற்ற கோயில்களில் காணப்படாத அளவுக்கு ஒரு சுத்தம், அப்படி ஒரு பராமரிப்பு. இந்த விஷயங்களே மனதிற்கு ஒரு நிறைவை தந்தது. கோயிலின் ஆரம்ப கால தோற்றத்தையும், புதிய கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததையும் புகைப்படமாக எடுத்து வைத்திருந்தார்கள். வாரியார் சுவாமிகளின் பெரு முயற்சியும், கோயில் சிறப்பாக எழும்ப காரணம் என்றும்
பக்தர்கள் பேசக் கேட்டேன். வாரியார் சுவாமிகளின் புகைப்படம் ஒன்றும் (எம்.ஜி.ஆர் உடன் இனைந்து இருப்பது) இருந்தது.

முருகன் எங்கள் குல தெய்வம். ஒரு காலத்தில் எனது ஒவ்ஒரு அசைவுக்கும் முருகனை அழைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தேன்.வடக்கே வசித்த நாட்களில், நான் முருகா என்பதை, அவர்கள் முர்கா(சேவல்/கோழி) என்று புரிந்துகொண்ட தமாஷெல்லாம் நடந்துள்ளது ( க்யோங் பார்பார் முர்கா முர்கா போல் ரஹே ஹோ?).

முருகனை நினைக்கும் பொழுதெல்லாம் வாரியார் சுவாமிகளின் நினைவை தவிர்க்க இயலாது. எனது சொந்த ஊரான நெய்வேலியில் ஸத்ஸங்கம் மற்றும் மனித்வீபம் என இரு இடங்கள். இங்குதான் வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், பால கிருஷ்ன சாஸ்திரிகள், அனந்த லஷ்மி நடராஜன் அகியோரின் ராமாயனம், மஹாபாரதம், பாகவதம், கந்த புரானம், திருப்புகழ் உபன்யாசங்கள் நடைபெறும்.

வாரியார் சுவாமிகளின் உபன்யாசம் என்றால் நாங்கள் முன் வரிசையில் அமர்ந்திருப்போம். அவர் சிறுவர்களிடம் கேள்வி கேட்பார், பதில் சொன்னால் ஒரு பரிசு. நான், எனது அண்ணன், அக்கா அனைவரும் இது போன்ற பரிசுகளை வாங்கியிருக்கிறோம்.
இங்குதான் வாரியார் சுவாமிகளுக்கு தி.க வினர் செருப்பு மாலையிட்டனர்.

வாரியார் சுவாமிகள், வடலூர் சத்ய ஞான சபைக்கும் நிறைய திருப்பணி செய்துள்ளார்கள். வாரியார் செய்யாத இறைசேவையும், தமிழ் சேவையுமா?. அவரைப் போன்ற ஆஸ்திகர்களின் கண்களுக்கு,வடலூர் சபையில் தெரியாத குற்றமும்/குறையும், அவருக்கு செருப்பு மாலை போட்டு அவமானப் படுத்திய, நாத்திக திருட்டுக் கூட்டங்களின் கண்களுக்கு தெரிவதின் பின்னால் இருப்பது நாத்திகர்களின் சூழ்ச்சியா?/பிழைப்பா?.

கி.வீ ஆர்பாட்டம் செய்ய வடலூர் வருகிறாராம். வரட்டும், முதலில் வாரியார் மாதிரி அடியவர்களின் சுயமரியாதைக்கு செருப்பு மாலையிட்டு செய்த அவமரியாதைக்கு மன்னிப்பு கேட்கட்டும். பிறகு கேள்வி கேட்கட்டும்.

கி.வீ உனக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு?. கருப்பு சட்டையை உதறிவிட ஏன் முடிவெடுத்தாய்?.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Tuesday, November 21, 2006

வாழ்க்கை வெறுத்துப் போச்சு

ஒரு பதிவு போடலாம்னு, கிட்டதட்ட மூனு மணி நேரமா முயற்சி செய்து இப்போதுதான் ப்ளாக்கர் பீட்டா கிடைத்தது. ஏன் இந்த பீட்டாவுக்கு மாறினோம்னு வெறுப்பா இருக்குங்க. பின்னூட்டமும் போடமுடியலை. எனக்கு மட்டும்தான் இப்படியா இல்லை எல்லோருக்குமா? தெரியவில்லை.சாப்டுட்டு தூங்கப் போனும் நாளைக்கு பாக்கலாம்.

ஆங், ஒரு முக்கியமான விஷயம். எங்ககிட்ட ஒரு பூனை இருக்கு. பெயர் நங்கி( சிங்களப் பெயர்). ஜெத்தாவுல இருக்கற மக்கள் யாருக்காவது வளர்க்க வேண்டுமானால், இங்கே தெரியப் படுத்தவும்.பூனையோட வரலாறு அறிய விருப்பமுள்ளவர்கள் பார்க்கவும் எனது முந்தைய பதிவு பெண் என்பதால் (october 27).
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Saturday, November 18, 2006

மனிதன் மலம் சுமக்க யார் காரணம்?.

நான் வேகத்தின் காதலன்.எப்போது எந்த வண்டியை தொட்டாலும் அதன் முழு வேகத்தை முயற்சி செய்து பார்ப்பதை ஒரு சாகசமாக நினைப்பவன்.ஆனால் வண்டி ஓட்டும்பொழுது ஒரு சிறிது கூட கவனம் பிசகாமல் இருக்க முயற்சிப்பேன்.140 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு சிறு தவறு கூட பெரும் விபத்தில் முடிய வாய்ப்பு உள்ளதால், எப்பொழுதும் ஒரு ரெட் அலர்ட் கண்டிஷனில்தான் ஸ்டியரிங் பிடித்திருப்பேன்.அதனால் சாலையில் ஒரு சிறு இடையூறு கூட எனக்கு எரிச்சலை கொடுக்கும்.ஒரே ஒரு விஷயத்தை தவிர,அது உடைப்பெடுத்து ஓடும் சாக்கடையையோ அல்லது மலக்கால்வாயையோ சுத்தப் படுத்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை கண்டால்.

இன்று அருணா சாய்ராமின் குரலில்,சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியாரின் குறை ஒன்றும் இல்லை உச்ச ஸ்தாதியில் ஒலிக்க,
உச்ச வேகத்தில் செல்லும் பொழுது, திடீரென்று அனைத்து வாகனங்களும் வேகம் குறைய ஆரம்பித்தன.சாலையில் சில தொழிலாளர்கள், அடைபட்டு, பொங்கி ஓடிய மலக்கால்வாயை சரிப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

குறையொன்றும் இல்லையை ரசிக்க முடியவில்லை.ஏன் இந்த நிலைமை என்று யோசித்தேன்.ப்ளாக்கர் பகுத்தறிவு கவுண்டனாகவோ, களத்துமேட்டு காட்டானாகவோ இருந்திருந்தால் வெகு சுலபமாக மனுவின் மீது பழியைப் போட்டு விடலாம். ஆனால் நிஜமான அக்கறையோடு யோசித்தபோது ஒரு மின்னல் வெட்டியது.

இதற்கு காரணம் நகரமயமாக்கல்தான். கூடவே இதற்கு ஏற்ற வடிவில்
நகரங்களை வடிவமைக்காததும் / பழைய நகரங்களை மாற்றி அமைக்காததும்.
எனது சொந்த ஊரான நெய்வேலி நகரத்தில் இந்த பிரச்சனை கிடையாது.இங்கு மலக்கால்வாய் ஊரின் எல்லையில் உள்ள ஒரு பெரிய கினற்றில் சென்று முடியும். அங்கு ஒரு பெரிய மத்தால் கடையப்பட்டு, அந்த நீர் புல் வெளியில் பாய்ச்சப்படும்.அதில் விளையும் புல்லை( மிகச் செழுமையாக இருக்கும் ) வீதிகளில் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

மனிதன் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த காலங்களில் இந்த பிரச்சனை இல்லை.ஆத்தங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால்,வரப்பு என இதற்காக சுற்றிய நாட்களெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.

இந்த பிரச்சனையை நம்மூர் ஆட்சியாளர்கள் நினைத்தால் மிகச் சுலபமாக தீர்க்கலாம்.அவர்களை செயல்பட விடாமல் தடுப்பது எது என்றுதான் தெரியவில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Thursday, November 16, 2006

விட்டதும், சுட்டதும், கெட்டதும்.

கடந்த இரு நாட்களாக ஜெத்தா வாழ் தமிழர்கள் மிக சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்.காரணம்,
கவிஞர் மு.மேத்தா மற்றும் புலவர் சாரங்கபாணி அவர்களின் வருகையும், அவர்களின் பேச்சும்,கவிதையும்.

இதில் புலவர் சாரங்கபாணி அவர்களுடன், இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு முன், சிறிது நேரம் சவுதி வாழ்க்கையை பேசிக் கொண்டிருந்தேன்.அதன் பின் புலவர் ஐயா கூறியது; அரபு உலக வாழ்வில் நம் மக்கள் பெற்றது அதிகம்.இழந்தது அதை விட அதிகம்.

கடந்த வாரம் வியாழன் அன்று எனது பாட்டி சாரதா
( தாயாரின் தாயார் ) வடலூரில் காலமானார்.அவருக்கு வயது 84.நான் ஐந்து வயதுவரை அவரை அம்மா என்றுதான் அழைத்து வந்தேன்.இந்த முறை விடுப்பில்
இந்தியாவில் அவரை சந்தித்த பொழுது, முரளி, பாட்டி சீக்கிரமா போயிடம்னு சாமிகிட்ட வேண்டிக்கோடா,
நான் வாழ்ந்தது போதும்."எல்லாரும் சாவ நினச்சு பயந்துகிட்டு இருக்காங்க, இந்த எமப் பய என்னை பாத்து பயந்து போய்ட்டான் போல, எங்கிட்ட வரவே மாட்டேங்கரான்" என்று ஜோக் அடித்தார்.

பாட்டி,என் ஆத்துக்காரி திரும்பவும் உண்டாகி இருக்கா.இருந்து, அந்த குழந்தையையும் பார்த்துட்டு போ என்றேன். புண்யாத்மா என்பார்களே அதற்கு உதாரனம்.அவருடைய வாழ்வையும் வாக்கையும் மிக விவரமாக பதிய வேண்டும் என்று ஒரு ஆசை.

இந்த வியாழன் அன்று(இன்று)திரும்பவும் ஒரு மரணச் செய்தி.எனது மனைவியின் பாட்டி( அம்மம்மா)காலமானார்.இவர் எனக்கும் அம்மா வழி உறவுதான்.
அவர் இருக்கும் இடம் எப்பொழுதும் ஒரே உற்சாகமாக இருக்கும்.தான் உற்சாகமாக இருந்து அடுத்தவரை சிரிக்க வைப்பதெல்லாம் பெரிய வரம்.அது வாழ்வில் அனைவருக்கும் கிட்டாது.பயங்கர குறும்புக்கார பாட்டி.

இந்த விடுப்பில் சந்தித்தபோது மனம் நிறைய வாழ்த்தினார்.என்ன செய்வது? பரதேச வாழ்வில் பகிர்ந்துகொள்ள முடியாததில்,அதிகமாக கஷ்டப்படுத்துவது மரண செய்திதான்.

பட்டினத்தாரின் வரிகள் ஞாபகம் வருகிறது.
" உயிர் விட்டது, உடலை சுற்றம் சுட்டது" என்று.
ஆனால் மரணம் போலொரு சிறந்த ஆசான் உலகில் இல்லை.மரண செய்தி கேட்கும் பொழுதெல்லாம்,
பொனம் போன பிறகு எழவு வீட்டை கழுவி விடுவார்களே,
அதுபோல் மனதின் தீவினை எண்ணங்கள் கெட்டுப் போய்
சுயம் சிறிது கழுவப்படுகிறது.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Saturday, November 11, 2006

பற்ற வைப்பு

நண்பர் ஒருவர் alloy20 க்கு என்ன வெல்டிங் ராடு உபயோகப் படுத்தனும்னு?. கேட்டுருந்தார்.

இந்த alloy20-ஐ, carenter20 என்றும் குறிப்பிடுவார்கள்.இரண்டின் உலோகக் கலவையும் ஒன்னுதான்.
இது stainless steel வகையைச் சார்ந்த உலோகம்.
இதை ss320 என்பதாக வகைப்படுத்தி உள்ளார்கள்.
எனவே AWS320 என்று குறிப்பிட பட்டிருக்கும் வெல்டிங்ராடுகளை கொண்டு வேலையை தொடங்குங்கள் என ஆலோசனை கூறினேன்.

Friday, November 10, 2006

விடாது கருப்புக்கு வேண்டுகோள்.

கருப்பு,
சமீபத்தில் காக்டெய்ல் கம்யூனிசம்னு ஒரு பதிவர் எழுதியிருந்தாரு.அந்தமாதிரி உன்னோடத, வலைப்பதிவு பகுத்தறிவுன்னு வகைப்படுத்தலாம். ஏன்னா உம்ம பகுத்தறிவு எல்லாம் எழுத்தோட/பேச்சோட சரிபோல.செயல்ல எதுவும் கிடையாதுபோல.

நீ புரட்சி பன்னனும்யா. நீ கவுண்டன்னு ஆப்புல படிச்சேன்.உன்ன விட தாழ்ந்த ஜாதியில,விதவப் பொண்ணா,ரெண்டு குழந்த பெத்ததா, தாலி கட்டாம,ஐயர் வெக்காம, மேளம் அடிக்காம, மாலை மாத்தாம, வெறும் கைய மட்டும் புடிச்சு, முக்கியமா வரதட்சனை வாங்காம வாழ்க்கை துணையா ஏத்துக்கனும்யா.அப்படி பன்னாத்தான் அது புரட்சி திருமணம்.
அப்படி கல்யாணம் செய்யர எண்ணம் இருந்தா, அறிவுப்பு கொடுப்பா.உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் உன் திருமணத்துல வந்து கலந்துக்குறேன்.

உனக்கு ஒரு சகோதரி இருக்கர்தாவும் ஆப்புல படிச்சேன்.திருமணம் ஆகாம இருந்தா (ஆயிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்),பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்கலாம்.உறவு இன்னும் வலிமையா இருக்கும்.

மற்றபடி திருமணம் என்பது அவரவர் சொந்த விஷயம். இதுல ஜாதி மட்டுமே முக்கியமில்ல.பணமும், வேலையும் எவங்கிட்ட இல்ல.நல்ல மனம்தான் முக்கியம்.காசு பணம் இருந்தாலும் வக்கிரம் புடிச்ச பசங்களுக்கெல்லாம் எவனும் பொண்ணு கொடுக்க மாட்டான்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளிதரன்.

Wednesday, November 08, 2006

வள்ளலாரும்..விடாதுகருப்பும்..ஜால்ராக்களும்.

விடாது கருப்பின் பதிவில் இப்போதுதான் மருதூர் இராமலிங்கம் பிள்ளை பற்றிய கருப்பின் பினாத்தல்களையும், அவரது அடிவருடி அரைகுறைகளின் பின்னூட்டங்களையும் படித்தேன். நினைவு தெரிந்த நாள் முதல் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்று சொல்லி வாழ்ந்துவரும் நான், சிலரின் தெளிவிற்காக இந்தப் பதிவை எழுதுவது அவசியமாகிறது.

நான் பிறந்து வளர்ந்தது நெய்வேலியாய் இருந்தாலும், முதல் வகுப்பு படித்தது வடலூர் முருகானந்தா ஆஸ்ரம பள்ளியில்தான். எனது தாய் வழிப்பாட்டன், மாமன்மார்கள், சித்தப்பா அனைவரும் வடலூரில்தான் வசித்து வருகிறார்கள். நான் நடை பழகிய நாள் முதல் வடலூர் சத்திய ஞான சபை
செல்லும் பழக்கமுடையவன்.

எனது குடும்பத்தார் அனைவரும் கூட்டாக அருட்பா படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். எனது குடும்பத்தில் ஜோதி என்ற பெயருடைய பல குழந்தைகள் உண்டு. அந்த அளவு வள்ளல் மீதும், அருட்பா மீதும் பற்றுள்ள குடும்பம் எங்களுடையது.

எனது மகனுக்கு, வள்ளல் கையால் ஏற்றப்பட்டு 140 வருடங்களுக்கும் மேலாக அணையாமல் பாதுகாக்கப்படும் அடுப்பில் சமைத்த உணவினைத்தான், முதல் சமைத்த உணவாக கொடுத்தோம்.

மானிடரின் வயிற்றில் பசி என்னும் அணையா நெருப்பு உள்ளவரை, இந்த அடுப்பு அணையாமல் எரிந்து, பசித்த வயிற்றிர்கு உணவிட வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளை. இங்கு தானியங்கள் சேகரிக்க பெரிய பெரிய பத்தாயங்கள் இருக்கும். சுற்றுப் பகுதிவாழ் மக்கள் மூட்டை மூட்டையாக இங்கு கொண்டு வந்து தானியங்கள் கொடுப்பார்கள்.எங்கள் குடும்பத்தில் எந்த விஷேஷமாய் இருந்தாலும், இங்கு தானியம் கொடுப்பதை நாங்கள் ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம்.

தைப்பூச திருநாள் எங்களுக்கு மிக முக்கியமான நாள். குடும்பத்தார் அனைவரும் பூசத்திற்கு முன்பே வடலூரில் கூடி விடுவோம். சிறு வயதில் ஒரே கொண்டாட்டமாக இருந்த பூசம், பெரியவன் ஆனதும் உள் முகப் பயனத்திற்கான உந்துதலாய் இருந்தது.

பூசம் அன்று ஆறு திரைகளை விலக்கி ஏழாவதாக உள்ள ஜோதி தரிசனம் காட்டுவார்கள். ஆறு திரைகள், ஆறு ஆதார நிலைகளையும் ஏழாவதான ஜோதி தரிசனம், ஜோதிவடிவான இறை தரிசனம்( சகஸ்ராரம்) என்றும் சொல்வார்கள்( மறைபொருள்).

எனது சித்தப்பா குடும்பம் ஒரு சத்திரத்திற்கு பொறுப்பாளிகள்.அதனால் பூசத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சில ஆயத்த வேலைகளை
சன்மார்கிகளுக்காக செய்ய ஆரம்பித்து விடுவார்கள். சன்மார்கிகள் வந்து தங்கி செல்ல, உறங்க,உணவருந்த தேவையான ஏற்பாடுகள். இதை அவர்கள் சில தலைமுறைகளாக ஒரு தொண்டாகத்தான் செய்து வருகிறார்கள் ( பிழைப்பு அல்ல).

தைப்பூசம் அன்று, வடலூர் பிராமண சங்கத்தின் சார்பாக தண்ணீர்ப் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு மோர், பானகம், சித்ராண்ணம் அளிப்பதையும்
வழக்கமாக செய்து வருகிறோம்.

இப்போது கருப்பின் புரட்டுகளைப் பார்ப்போம்.

"சிதம்பரத்தை அபகரித்து தமிழை தள்ளிவைத்துபோல் வடலூரிலும் தங்கள் கைங்கர்யத்தைக் காட்ட பேராசைப்படுவது தெரிகிறது.வள்ளலாரும், தன் முப்பாட்டனாரும் நண்பர்கள் என்றும், சத்தியஞான சபையில் வழிபாடு நடத்த தங்கள் குலத்திற்கே உரிமை உள்ளதாக வள்ளலார் எழுதிக் கொடுத்ததாகவும் போலியாக ஆவனங்களை தயார் செய்து தனது அட்டூழியங்களை செய்துவருகின்றார் சபாநாதஒளி என்ற இந்த பார்ப்பனன்."

நாங்கள் எல்லாம் ஒளி மாமா என்று அன்போடு அழைக்கும் இந்த சத்தியசீலருக்கு, பல காலமாகவே நாத்திகர்களாலும், பிராமண
துவேஷிகளாலும் பிரச்சனைதான். பல வருடங்கள் முன்னதாகவே

சிலபேர் அவரை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றார்கள்.

அவர் சுப்ரீம் கோர்ட்வரை சென்று வள்ளலாரின் கையெழுத்தாலான அந்த ஆவனங்களை நிரூபித்துள்ளார். வள்ளலார் சத்திய ஞான சபை கட்டிடத்தை வடிவமைத்து ( தாமரை வடிவிலான இந்த கட்டிடம் வள்ளலாரின் சொந்த வடிவமைப்பு) கட்டி முடித்த பின், அதன் பராமரிப்பையும், வழிபாட்டு முறைகளையும், சொத்துக்களையும் நிர்வகிக்கும் பொறுப்பையும், இந்த ஒளி மாமா குடும்பத்திற்கும் அவரது தலைமுறைக்கும் ஒப்படைத்து விட்டார். இது வள்ளலார் ஜோதியில் கலக்கும்(மேட்டுக்குப்பம்) முன்னரே நடைமுறைப் படுத்தப்பட்டது.

அதனால் சில பூனைகள் கண் மூடிக்கொண்டு
பூலோகம் இருண்டு விடாதா, எலி பிடிக்கலாம் என்ற கனவை முடித்துக் கொள்வது நன்று.


இப்போது கருப்பின் இன்னொரு புரட்டைப் பார்ப்போம்.

"அந்த சத்திய ஞான சபைக்கு சோதனையாக, ஆமை புகுந்தது போல் ஆரியர்கள் புகுந்து இராமலிங்க வள்ளலாரின் வழிபாட்டு முறையை தங்களுக்கு சாதகமாக சிவன் கோவில் போல் மாற்றியும், சமஸ்கிரத மந்திரங்களை ஓதியும் இழுக்கு ஏற்படுத்தி, கேவலமான பிழைப்பை நடத்துகின்றனர்."

இந்த சபையில் வள்ளராரால் பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் உள்ளது.ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் இந்த சிவ லிங்கத்திற்கு அர்ச்சனையும், அபிஷேகமும் நடைபெறும். எனது குழந்தைப் பருவத்திலிருந்தே நான் இந்த அபிஷேக அர்ச்சனை முறைகளை கண்டு வந்திருக்கிறேன். இது ஒன்றும் இடைச்செருகல் அல்ல.

இதனால் அறியப்படுவது யாதெனில் " கோயில்களை கொள்ளை கூடாரங்களாக மாற்றிவரும் நாத்திக பகுத்தறிவு
திருட்டுக் கூட்டம், இப்போது வடலூருக்கு குறி வைத்துள்ளார்கள்"
இந்த வக்கிர புத்திகாரர்கள், வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பில் தண்ணீர் ஊற்றும் முன் தடுத்து, சரியான மனிதர்களின் பொறுப்பில் இந்த தொண்டு தொடர நம் ஆதரவை பதிவோம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

Tuesday, November 07, 2006

பேனைப் பெருமாளாக்குவது.

திரு சுந்தர வடிவேல் அவர்களின் சாவிலும் பிழைக்கும் பார்ப்பன கூட்டம் பதிவிற்கு இட்ட பின்னூட்டம்.

ஐயா, உங்கள் தந்தையாரின் மறைவிற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

1. அறுபது வயது முதியவர்தானே என இதை நீங்கள் மிகச் சாதாரனமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டிருப்பேன்(ஜாதி ஆராய்ச்சியெல்லாம் செய்திருக்க மாட்டேன்).

2. உங்கள் மனதில் ஊட்டி வளர்க்கப் பட்டிருக்கும் பிராமண எதிர்ப்புதான் உங்களை கோபப்பட வைத்திருக்கிறது.

3. பிராமணர்கள் என்றில்லை, தமிழகத்தில் எந்த சாதியைச் சேர்ந்த வயதானர்வர்களாயிருந்தாலும், வயதில் சிறியவரை வா, போ என்று ஒருமையில் அழைப்பதுதான் நமது கலாச்சாரம்/பழக்கம்.

4. இந்த விஷயத்தில், உங்கள் சித்தப்பா என்ன உணர்ந்தார் என அறிய ஆசைப்படுகிறேன்.

5. நான் பழகியவரையில், பிராமண குடும்பங்களில், எங்களுக்குள்ளாகவே நாங்கள் ஒருமையில்தான் பேசிக் கொள்வோம். உதாரணத்திற்கு அண்ணா, அக்கா யாராயிருந்தாலும் வாடா, போடாதான். அப்பா, அம்மா எல்லாம் நீ,போ,வா தான். இதில் ஜாதி வித்தியாசம் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் கிடையாது.

6. இப்படி அழைப்பது ஒரு அன்பினாலும், அந்நியோன்யத்தினாலும்தான், அவமரியாதக்காக அல்ல.

7. என்னுடய அனுபவத்தில், கோவை மாவட்டத்தை தவிர்த்து, தமிழகத்தின் ஏனைய இடங்களில் பேசு மொழியில் மரியாதை என்பதே கிடையாது ( எல்லாம் ஒருமைதான்).

8. கோவையில் நான் இருந்தபோது நடந்த சம்பவம்.நான் குடியிருந்த வீட்டின் ஓனர் ஒரு கவுண்டர். ஒரு நாள் தெருவில் குழி வெட்டும் வேலைமுடித்த சில உழைப்பாளிகள் குடிக்க தண்ணீர் கேட்டார்கள்.நான் தண்ணீர்கொடுத்தேன். நான் வீட்டினுள் சென்ற பின் என்னை பின் தொடர்ந்து வந்த எனது வீட்டு ஓனர். என்னப்பா சக்கிலிப் பசங்களுக்கு கையில/சொம்புல தண்ணீ கொடுக்கிற அதுவும் இல்லாம சொம்ப கழுவாம வேற கொண்டுப்போற என்று என்னைக் கடிந்து கொண்டார். நான் அதிர்ந்து போனேன். நம்புங்கள் அது நாள் வரை எனக்கு தீண்டாமை என்றால் என்னவென்றே தெரியாது.

9. இதே மனிதர் அவர்கள் வீட்டு மூன்று வயது குழந்தையை நான் வாடீ போடீ என்று அழைப்பதாக ஒரு கட்டத்தில் வருத்தப் பட்டார். அவர்கள் எல்லாம் ஏங் கண்ணு என்றுதான் அழப்பார்கள். நானும் அதுபோல் அந்த குழந்தையை மரியாதையாக அழைக்க வேண்டும் என்று கேட்டுக்(கட்டாயம்) கொள்ளப்பட்டேன்.எனக்கு இது மிகவும் செயற்கையாக/விநோதமாக இருந்தது. நானும் they need respect?. என்று கோபப்பட்டு சிறிது காலம் அந்த குழந்தையிடம் பேசாமலே இருந்தேன். குழந்தைதானே அதற்கு இந்த வார்த்தை ஜாலமெல்லாம் புரியவில்லை. அது என்னை(அன்பை) சரியாகவே புரிந்து கொண்டிருந்தது.அதனால் குழந்தையிடம் ஏன் கோபம் என்று சீக்கிரம் இளகி விட்டேன். ஆனால் கடைசிவரை வாடி போடி தான்.

10. மருத்துவர் இராமன் அடிமை கூட பத்திரைக்கையாளர்களிடம் நீ,வா,போ என்றுதான் பேசுவார்.

11. 1994/1995ஆம் வருடம், நான் சென்னை,திருவல்லிக்கேனியில் வசித்த வருடம், ஒரு நாள் மெரீனா பீச்சில் குளித்துக் கொண்டிருக்கும்போது கரைக்கு இழுக்கப்பட்ட கட்டுமரத்துக்கு அருகே சிறிது சென்றதால்,வீரமணியால்(தாதா)ஓ..ஒதுங்குடா என்று திட்டப்பட்டேன், சிறிது முறைத்ததும் தே...என்று திட்டப் பட்டேன். அவர்களது இயல்பான பேச்சு மொழியே அதுதான்.அதுவில்லாமல் வலியவனை எட்டி உதைக்க முடியுமா என்ன?.

12. நீ, வா, போ என்று அழைத்தது ஒரு பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் பேனை பெருமாள் ஆக்கி விட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா,முரளி தரன்.

Thursday, November 02, 2006

தேன்கூடு போட்டி - இலவசம்.

மூன்றாம் நாள்:-
அறைக்கு பக்கத்து சந்தில் யாரோ நடந்து வரும் ஓசை கேட்டது. யாராயிருக்கும்?.

முரளி கதவத் திற.... இது வாசனின் குரல் அல்லவா.

மெதுவாக எழுந்து சென்று கதவைத் திறந்தேன்..... வாங்க வாசன்.

என்னப்பா இவ்ளோ சீக்கிரமா படுத்துட்ட?.

தாடப்பள்ளிகூடம் சிமெண்ட் பாக்டரி போயிட்டு வந்தேங்க. நடையான நட, ஒரே டயர்ட், அதான் சீக்கிரம் படுத்துட்டேன்... நீங்க எப்ப வாசன் வந்தீங்க ராஜமுந்திரிலேந்து?.

ம்ம்ம்...இப்பதான்... சரி வாங்க, சாப்பிட போலாம்.

நான் டிபன் சாப்டுட்டேங்க...நீங்க போய் சாப்ட்டு வாங்க வாசன்,
எனக்கு தூக்கமா வருது.

ம்ம்ம்..பரவாயில்ல வாங்க, டிபன்தான சாப்டிங்க, செரிச்சிருக்கும். இப்ப சாப்பாடு சாப்ட்டு வரலாம்.

பசிக்கல வாசன்.

பொய் சொல்லாதிங்க முரளி. மூனு நாளா மெஸ் பக்கமே வரலன்னு பட்டுகாரு சொன்னாரு. பணம் இல்லன்னா கேட்க வேண்டியது தானே. ஏன் இப்படி கொலப்பட்னி கிடக்குரீங்க.

இல்ல வாசன் நான் வரல.

நான் உங்க friend ஆ இருக்கனும்னா..இப்ப கிளம்பி சாப்ட வாங்க.

பைக்கில் அழைத்துச் சென்று, சாப்பிட வைத்து, திரும்பி வீட்டில் விட்டுச் சென்ற நண்பா. நீ போட்ட அந்த சோற்றை இலவசம் என்று சொன்னால் மரியாதையாக இருக்காது என்பதால் அதை விட மிக ஆழமான வேறு பதத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.

இரண்டாம் நாள்:-

தாடகை எத்தன பெரிய உருவமா தெரியுமா இருந்தா?..

அவளோட நகம் ஒவ்வொன்னும் ஒரு முறம் பெருசு இருந்ததாம்.அப்படின்னா அவளோட விரல் எத்தன பெருசு இருந்துருக்கும், அவளோட கை எத்தன பெருசு இருந்துருக்கும். அவ எத்தன உயரமா இருந்துருப்பா.

அப்படிப்பட்ட ஒரு ராட்ஷஸிய, ராமா உன்னோட ஒற்றை அம்பு சாய்ச்சிடுச்சாமே!!!.

ராமா உன்னோட ஒற்றை பாதம் பட்டதும், கல் அகலிகையா மாறிடிச்சாமே!!!.

ராமா உன்னோட ஒற்றை பார்வைக்கு, அன்னை சீதா தன்வசம் இழந்தாளேமே!!!.

ராமா உன்னோட ஒற்றைக் கையால் சிவதனுசை முறித்தாயேமே!!!.

ஆயிரம் பெண்களை மணந்த தசரதனின் புத்திரன் நீ. ஆனால் ராமா, நீ ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்து காட்டினாயேமே.

அதனால்தான் ராமா என்னும் ஒற்றைச் சொல், இந்த பிறவியை காக்கும் மஹாமந்திரமானதோ!!!. ராமா..ராமா...ராமா.

ஹரிகதா முடிந்தது. அன்று பசி தீர்த்த கோயில் பொங்கலையும், சுண்டலையும் இலவசம் என்று சொன்னால் இழுக்கு. அதனால்தான் பிரசாதம் என்று சொல்கிறார்களோ.

ஐய்ந்தாம் நாள்:-

பசி ரொம்ப கொடுமைதான். மனசு இதுக்கெல்லாம் பழகிடுச்சு. வயிறுக்கு பழக்கமில்ல. உள்ள இருக்குர நெருப்புல எதையாவது அள்ளிப் போட்டுகிட்டே இருக்கனும். இல்லன்னா அந்த நெருப்பு சுமந்துகிட்டு இருக்கிறவனையும், சில நேரம் சுத்தி இருக்கிறவனையும் எரிச்சிடுது.

இரண்டு நாட்களாய் வயிறு காய்ந்து கிடந்தாலும், சூழ் நிலையில் இருந்த உற்சாகம் மனசை தொற்றிக் கொண்டது.

இன்னிக்கி எலக்க்ஷன் ரிசல்ட். அடுத்து ஆளப்போவது யார்?. காங்கிரஸ்ஸா அல்லது தெலுங்கு தேசமா?...ஊரே தவித்துக் கிடந்தது. எனது வயிறோ பசித்துக் கிடந்தது.

தெருவில் சுற்றிக்கொண்டிருந்த என் கண்ணில் பட்டது, கீழே கிடந்த ஒரு நாலனா.

சாதாரன நேரமாய் இருந்தால் அதை தாண்டிப்போயிருப்பேன். பசி வந்தாலே பத்தும் பறந்து போய்விடும், இங்கோ மூன்று நாள் அரைகுறை சாப்பாடு, இரண்டு நாள் கொலைப்பட்டினி.

நாலனாவை குனிந்து எடுத்தேன். தூரத்தில் ஒரு தள்ளுவண்டியில் இருந்த வாழைப் பழம் கண்ணில் பட்டது. நாலனாவுக்கு ஒரு பழம் தருவானா?..மிகுந்த அவமானத்துடன் காசை நீட்டி ஒரு பழம் கொடுங்க என்றேன்.

பழ வண்டிக்காரர்: நாலனாவுக்கு பழம் வராது தம்பி.

நான்: அமைதியாய் முகத்தை திருப்பி ஒரு ஓரமாய் நகர்ந்து நின்று கொண்டேன்.

ரேடியோ அறிவிப்பு: தெலுகு தேசம் பெரும்பான்மை பெற்றது. அடுத்த முதல்வர் என்.டி.ராமாராவ்.

ஒரே கைத்தட்டல், விசில் எங்கும் பரவியது.

பழ வண்டிக்காரர்: அண்ணகாரு ஜெயிச்சிட்டாரு டோய். ஒரே சந்தோஷக் கூச்சல். தம்பீ இந்தா என்று ஒரு முழு சீப்பு வாழைப்பழத்தை தூக்கிக் கொடுத்தார். கூடவே வாழ்க்கையில் நான் பெற்ற மறக்க முடியாத இலவசத்தையும்.

என்றென்றும் அன்புடன்,

பா.முரளி தரன்.












Tuesday, October 31, 2006

பற்றவைப்பு

கேளுங்கள் தரப்படும். பற்றவைப்பு சம்பந்தமான உங்கள் கேள்விகளுக்கு இந்த பதிவில் முடிந்தவரை எளிய தமிழில் பதில் தர ஆசைப்படுகிறேன். ப்ளாக் தொடங்கிய சமயத்திலேயே மனதில் இருந்த எண்ணம்தான். இன்றுதான் அறிவிக்க வேண்டுமென தோன்றியது. கேள்வி பதிலுடன் கூடவே இந்த துறை சம்பந்தமான வளர்ச்சிகளையும், எனது அனுபவங்களையும் பதிய ஆசை.
முதல் கேள்வியை நானே கேட்டுவிடுகிறேன். கேள்வியும் நானே, பதிலும் நானே.

1. ஆமாம், இந்த பற்றவைப்பு-ன்னா என்னாப்பா?. கேள்விப்படாத மாதிரி
இருக்கே?. அத சொல்லு முதல்ல.
பற்றவைப்பு - welding.

Friday, October 27, 2006

பெண் என்பதால்.

இந்தியாவில் விடுமுறை முடித்து சவுதி திரும்பிய எனக்கு, அலுவலகத்தில் இரு புதிய முகங்கள் காண கிடைத்தது. இருவரையும் எனது ரூம் மேட் சமீலாவுடன் பார்த்தேன். விடுமுறைக்கு செல்லும் முன் எனக்கும் சமீலாவிற்குமான உறவு எலியும் பூனையுமாக இருந்தது.

அவன் விடுதலைப் புலிகளை தீவிரவாதியென்பான், நான் போராளிகள் என்பேன். அவன் இரவு ஒன்பது மணிக்குள் உறங்க வேண்டுமென்பான், நான் ஒரு மணிவரை விளக்கெரித்து அவன் தூக்கம் கெடுப்பேன். நான் தியானம் பழகுவேன், அவன் மேற்கத்திய இசையை உரத்து ஒலிக்கச் செய்வான். இரண்டு பேருக்கும் உரசல் இருந்து கொண்டே இருந்தது. நேரடியாக மோதிக்கொள்ளாத அளவுக்கு, நண்பர்கள் எங்கள் இருவரையும் கட்டுக்குள் வைத்திருந்தனர்.

இப்படி எலியும் பூனையுமாக இருந்த இருவரும், இந்த இரு புது முகங்களின் வருகையால் ஒன்று சேர்ந்தோம். ஒருவர் ஆண் மற்றொருவர் பெண்.....பிறந்து ஐந்து நாட்களே ஆன இரு பூனைக்குட்டிகள்.

பூனைகளின் தாயார் அவற்றை எங்கள் வேர்ஹவுஸில் விட்டுச் சென்று விட்டதால், தான் அவற்றை பராமரிப்பதாக சமீலாவும்......... சமீலா அந்த குட்டிகளை தொட்டதால்தான், அவற்றின் தாயார் அவற்றை விட்டுச் சென்று விட்டதாக ( குற்றச் சாட்டு ) நண்பர்களும் என்னிடம் சொன்னார்கள்.

ஏனோ, அலுவலகத்தில் யாருக்கும் பூனைக்குட்டிகளை பிடிக்கவில்லை. எல்லோரும் பூனைக் குட்டிகளை, வேர்ஹவுஸிலிருந்து வெளியே எறிந்து விடவேண்டும் என மிகப் பிடிவாதமாக இருந்தார்கள். சமீலாவின் கோபத்துக்கு பயந்து அதைச் செய்யாமல் இருந்தார்கள். ஆனால் ஒரு குழுவாக இனைந்து, பூனைகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

சமீலா, பால் கரைத்து மூன்று வேளையும், பூனைகளுக்கு ஸ்பூனில் உணவு ஊட்டிக் கொண்டிருந்தான். அவன் தனது வேலையைச் சரியாகச் செய்யாமல்,
சதா சர்வ காலமும் பூனைகளோடு விளையாடுவதாக, அவனுக்கு எதிராக எங்கள் மேனேஜரிடம் சென்று ஏனையோர் புகார் செய்திருந்தனர். என்னிடமும் அவனுக்கும்,பூனைகளுக்கும் எதிரான கருத்துக்களை சொல்லி கொண்டிருந்தனர்.

முரளி, இத்தன சின்ன குட்டிகள, வெளிய எறியச் சொல்றாங்க, பால் கூட ஸ்பூனில் கொடுக்க வேண்டி இருக்கு. வெளியே எறிஞ்சா ஒரே நாள்ல செத்துரும்......இல்லன்னா வண்டி அடிச்சி போட்ரும்...
என்னால எறிய முடியாது....என்று புலம்பித் தீர்த்தான்.

அவனுடைய பிடிவாதத்தால் வன்மம் கொண்ட ஏனையோர், மேலும் அதிக புகார்களை அவன் மீது வாசித்துக் கொண்டிருந்தார்கள். அனைத்து ஊழியர்களின் புகாரை அடுத்து, சமீலாவிடம் எங்களது மேனேஜர் ஒரு விசாரனையை நடத்தி, விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார். இதை அறியாத நான், இரு பூனைகளுக்கும் பால் குடுக்க வசதியாக , இரு பீடிங் பாட்டில் வாங்கிக் கொண்டு அலுவலகத்தில் நுழைந்தேன். இப்போது நாங்கள் இருவரும் எதிரிகள்போல் மற்றவரால் பார்க்கப்பட்டோம்.

பூனைகள் சிறிது வளர்ந்த உடன், அவற்றை வெளியேற்றி விடுகிறோம் என எங்கள் மேனேஜருக்கு உறுதிமொழி கொடுத்து அப்போதைக்கு அவரிடம் இருந்து தப்பித்தோம்.

அவற்றை வளர்ப்பதால் சமீலாவும், பால் புட்டி வாங்கிவந்து அவ்வப்போது அவற்றிற்கு பாலூட்டுவதால் நானும், பூனைகளின் தந்தைகள் என அலுவலக நண்பர்களால் அழைக்கப்பட்டோம்.

வார இறுதியில், மேலும் ஒரு பிரச்சனை. இரண்டு நாட்கள் குட்டிகளை விட்டுச் சென்றால் உணவின்றி இறந்துவிடும் என்பதால், குட்டிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று, பால்கனியில் விட்டிருந்தோம்.

குட்டிகள் ஹாலில் நுழைவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் ( ஒன்னுக்கு, இரண்டுக்கு பிரச்சனைதான் ). அதனால் பால்கனி கதவை மூடி வைத்திருந்தோம். இப்போது காற்றோற்றம் இல்லை என எதிர்ப்பு தெரிவித்தார்கள். நாங்கள் அவர்களை சமாதானம் செய்தால், அப்பொழுதுக்கு அமைதியாகிவிட்டு சிறிது நேரம் கழித்து திரும்பவும் எதிர்ப்பாளர்கள் ஆனார்கள்.

எப்படியோ இரண்டு வாரங்கள் நகர்த்திவிட்டோம். குட்டிகளும் ஓடப் பழகி இருந்தன. ஆனால் புட்டிப் பால் மட்டும்தான் குடித்தன. தட்டிலிருக்கும் பாலை நக்கிக் குடிக்க அவற்றிற்குத் தெரியவில்லை. இந்த லட்சனத்தில் திட ஆகாரம் எங்கிருந்து குடுப்பது.

ஷாப்பிங் மால்களில் சுற்றியபோது, cat food என கண்ணில் பட்டது. கையில் எடுத்துப் பார்த்தால், மீன் மற்றும் எலி சேர்த்து செய்யப்பட்டதாக இருந்தது. பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்துவிட்டேன். திட உணவு கொடுக்கும் முன், சிக்கன் எலும்புகளை கொடுத்து கடிக்கப் பழக்கலாம் எனவும், அந்த சுவைக்கு பழக்கிய பிறகு வேறு உணவுகளை கொடுக்கலாம் எனவும் நானும் சமீலாவும் சேர்ந்து முடிவெடுத்தோம். எலும்புகள் வாங்கி வரும் பொறுப்பை சமீலா ஏற்றுக் கொண்டான்.

ஆனால் பாலைத்தவிர வேறு எந்த உணவையும் அவை தொட மறுத்தன. எத்தனை நாள் அவை பால் குடிக்கும் என்ற விவரமும் தெரியவில்லை. பூனைகளின் ஆயுட்காலம் பன்னிரண்டு வருடங்கள் எனவும் அதில் பால் குடிக்கும் பருவம் ஒரு வருடம் எனவும் கூறி, ஒரு நண்பன் வேறு வயிற்றில் புளியைக் கரைத்தான். நாங்கள் இருவரும் கையில் பால் புட்டியோடு அலைந்து கொண்டிருந்தோம். எப்படியோ பூனைகள் அவற்றின் அழகால், துறுதுறுப்பால் மேலும் இரு ஆதரவாளர்களை சேர்த்துக் கொண்டன.

இப்போது, பூனைகள் வேர்ஹவுஸில் இருக்க பெரிய எதிர்ப்பு இல்லை என்றாலும், வார இறுதியில் வீட்டிற்க்கு கொண்டு வருவதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். அதனால் குட்டிகளை இனிமேல் பால்கனியில் விடுவதில்லை எனவும், அதற்கு பதிலாக
மாடிப் படிகளுக்கு அருகில் உள்ள இடை வெளியில் விடுவது எனவும், ஆனால் குட்டிகள் சாலைக்கு சென்றுவிடும் அபாயம் இருப்பதால் வீட்டின் மெயின்டோரை எப்பொழுதும் மூடியே வைத்திருப்பது என்ற முடிவும் பலத்த எதிர்புகளுக்கு இடையே எடுக்கப்பட்டது. இப்படியே மேலும் இரண்டு வாரங்கள் கடந்தன.

இரண்டு குட்டிகளில் ஒன்று ஆண், மற்றொன்று பெண். ஆண் வேகமாகவும், பெண் சிறிது மந்தமாகவும் இருந்தது. குட்டிகளின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் "ஆயிரம் இருந்தாலும் ஆம்பளை ஆம்பளைதான்" என்று அல்ப சந்தோஷம் வேறு பட்டுக்கொண்டார்கள். ஆனால் நான் கூர்ந்து கவனித்ததில், பெண் குட்டியிடம், உள்ளுணர்வு அதிகமாக இருந்ததைக் கண்டேன். குதிப்பது, தாவுவது, ஏறுவது, உரசுவது போன்றவற்றை பெண்குட்டிதான் முதலில் செய்தது. ஆண் இவைகளை செய்ய சிறிது முயற்சி செய்து கொண்டிருந்தது.

ஒரு வார இறுதியில் ( வெள்ளிக் கிழமை ) நன்றாக ஊர்சுற்றிவிட்டு, விடியற்காலை நான்கு மணிக்கு படுக்கைக்கு சென்ற சமீலாவும் நானும், தாமதமாக எழுந்ததால், ஒரே ஓட்டமாகக் கிளம்பி, பதினைந்து நிமிடம் தாமதமாக அலுவலகம் சென்றடைந்த பிறகுதான், பூனைகளுக்கு பால் கொடுக்க மறந்ததும்,
வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டதும் ஞாபகம் வந்தது.

நண்பன் மஹபூஸ், சமீலாவிடம், பூனைகளை தெருவில் பார்த்ததாக சொல்லிக் கொண்டிருந்தான். யாரோ மெயின் டோரை திறந்து வைத்திருந்ததால் பூனைகள் தெருவுக்கு வந்துவிட்டது போலும். குட்டிகள் தெருவில் சுற்றிகொண்டிருந்ததை அத்தனை பேர் பார்த்திருந்தும், பூனை எதிர்ப்பாளர்கள் எங்களிடம் விஷயத்தைச் சொல்லாமல் விட்டுவிட்டதால்,
"இதயமற்றவர்கள்" என அனைவரையும் ஏசிக் கொண்டிருந்தான் சமீலா.

ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் இருக்கிறது என்ற பொய்யைச் சொல்லி, அலுவலகத்திலிருந்து உடனே கிளம்பிய நான், வீட்டிற்கு சென்று பூனைகளை தேட ஆரம்பித்தேன். எங்கள் வீட்டிலிருந்து ஒரு முன்னூறு மீட்டர் தொலைவிலிருந்த ஒரு குப்பைத்தொட்டியின் அருகில் காக்கைகளால்
விரட்டப்பட்டுக் கொண்டிருந்தது பெண் குட்டி.

நான் காரிலிருந்து இறங்கியதும் ஓடி வந்து காலை கட்டிக்கொண்டு .....மியாவ்......மியாவ் என இடைவிடாமல் கத்த ஆரம்பித்து விட்டது (எனது கறுப்பு காலனிகளை அதற்கு அடையாளம் தெரியுமோ?.) பசியெடுத்தால் இப்படித்தான் விடாமல் காலைசுற்றி வந்து கத்தித் தீர்த்து விடும்.

எத்தனை தேடியும் ஆண் குட்டியை கண்டு பிடிக்க முடியவில்லை.
குப்பை பொறுக்கும் ஆப்பிரிக்கர்களிடமும், தெருவை சுத்தம் செய்து கொண்டிருந்த பெங்காலிகளிடமும் விசாரித்துக்கொண்டே சுற்றி சுற்றி வந்தேன். எங்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் அத்தனை குப்பை தொட்டிகளையும், சந்து பொந்துகளையும் விடாமல் தேடிப்பார்த்தேன்.

சவுதியில் பூனைகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொரு தெருவிலும், காருக்கு அடியில், ஏதோவொரு பூனை கண் மூடி ஏகாந்தத்தில் கிடந்தது. சாலையில்
குனிந்து , படுத்து என அத்தனை விதமாகவும் தேடியும் ஆண் குட்டி தட்டுப்படவில்லை.

பெண் குட்டி பாலுக்காக கதறிக் கொண்டிருந்தது. பெண் என்பதால் இதை புறக்கனித்துவிட்டு , ஆண் குட்டியை மட்டும் யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என நினைத்துக் கொண்டேன். வீட்டிற்குச் சென்று குட்டிக்கு பால் கொடுத்துவிட்டு, பத்திரப் படுத்திவிட்டு, எனது வேலைகளை தொடர தொழிற்பேட்டைக்கு சென்றுவிட்டேன்.

சாயங்காலம் வீட்டிற்கு வந்ததும், மனது உறுத்தலாகவே இருந்தது.
நானும், சமீலாவும் ஆளுக்கு ஒரு பக்கமாக மீண்டும் தேடுதல் வேட்டையை
ஆரம்பித்தோம். antha shuf sageer qitt hinna?( நீ பார்த்தாயா குட்டிப் பூனையை இங்கு) என்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அரபிக்குழந்தைகளை விசாரித்ததில் ஒரு துப்பு கிடைத்து, ஒரு மணல் மேட்டின் மேல் படுத்து முனகிக் கொண்டிருந்த ஆண்பூனையையும் கண்டுபிடித்து விட்டோம்.
மிக சந்தோஷமாக இருந்தது.

ஆனால் குட்டியின் குணம் மிகவும் மாறி இருந்தது. பெரிய பூனைகளால் தாக்கப்பட்டிருக்கும் என நினைத்தோம். பால் குடிக்க மறுத்தது.
ஐந்து நாள் ரம்தான் விடுமுறையை ரியாத்தில் கழித்துவிட்டு திரும்பிய என்னிடம்,
பால் குடிக்காமலே இருந்து, ஆண் குட்டி உயிரை விட்டுவிட்டதாக சமீலா வருத்தத்தோடு சொன்னான்.

ஆனால் பெண் என்பதால் அலட்சியமாக பார்கப்பட்ட குட்டி, தட்டிலிருந்து பால் குடிக்கவும், திட உணவு உண்ணவும் ஆரம்பித்து விட்டது. ஏதோ ஒரு சாதனை செய்துவிட்டது போல சோகத்திலும் இருவரும் மகிழ்ந்தோம்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Thursday, October 19, 2006

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்யா அற்புதமான நடிகை.வசந்தின் ஒரு படத்தில் கவுதமியின் அம்மாவாக மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.அப்புறம் அந்த அபூர்வ ராகங்கள் மறக்க முடியாத நடிப்பு.

அமரன் படம் என்று நினைக்கிறேன்,ஒரு பாடல் கூட பாடியிருப்பார்.

மிக நாகரீகமான,குடும்ப பாங்கான பாரம்பர்ய இந்திய அழகு.முக்கியமாக அந்த கண்கள். தீட்சன்யம் என்பதற்கு உதாரனம்.

தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய சோகத்தை சுமந்து வாழ்ந்த பெண்.

கல்லூரி வாழ்வில் ஏற்பட்ட கண்மூடித்தனமான காதலில் தேடிக்கொண்ட துனையால், தன் வாழ்வில் சந்தித்த துயரங்களை ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.

கடைசிவரை அவரது கணவர்,அவருக்கு விவாகரத்து தரவில்லை என நினைக்கிறேன்.

ஒரு பெண் எழுத்தாளரிடம் (அனுராதா ரமனன் (அ )சிவசங்கரி (அ )வாசந்தி (அ ) இந்துமதி என நினைக்கிறேன் )....குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று கேட்டு ஆதங்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன்.

சட்ட சிக்கலில் வாழ்க்கையை தொலைத்த அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்னும் இந்த நாட்டினில்தான் பெண்களுக்கு எத்தனை இன்னல்கள்.
வருத்தத்துடன்,
பா.முரளி தரன்.

Tuesday, October 17, 2006

ஜனனீ ஜன்ம பூமி - 1

இரண்டு மாதம் தாய் நாட்டு வாசம். இந்தியாவில் இருந்து திரும்பி வந்து பதினைந்து நாள் ஆன பிறகும் ஊர் வாசனை மறக்க மாட்டேன் என்கிறது.
அதனால் விடுமுறை நாட்களை பற்றி பதிவு போட்டு விடவேண்டியதுதான் என முடிவு செய்தேன்.

இரண்டு வருட சவுதி வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் இந்தியா.சென்னை விமான நிலையம் வாசல் தொட்டதும், கண்கள் முதலில் தேடியது குழந்தையைத்தான். இரண்டரை வயதில் விட்டுச் சென்றது. அடிக்கடி தொலைபேசியில் / கனினியில் பேசுவதுதான் என்றாலும், மெல்லிய உடலும்,
பிஞ்சு கைகளும் ஸ்பரிசிக்க, வாரி அனைப்பது போலான மகிழ்ச்சி வருமா.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு, முதல் ஆளாய் ஓடி வந்து, பாய்ந்து அனைத்துக் கொண்டான் குழந்தை. தன்னலம் அற்ற அந்த அன்பை, முழுதும் உள் வாங்கிக் கொண்டேன். இந்த இடத்தில் ஒரு வார்த்தை. எனது வாழ்வின் மிக சந்தோஷமான தருனம் எது எனக் கேட்டால், எனது குழந்தையால் அனைக்கப் படுவதும், எனது குழந்தையை அனைப்பதும் என நிச்சயமாகச் சொல்வேன்.

எனது சகோதரரின் பெண் குழந்தையும், எனது சகோதரியின் மைத்துனர் குழந்தையும் ( பெண் ), சொப்புச் சாமான் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு குழந்தை பொம்மையை சாப்பிட வைத்து, தாலாட்டி, தூங்க வைத்தார்கள். இதை கவனித்த நான், எனது குடும்ப பெண்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன்.

குழந்தைகள், தாயார் செய்ததை நினைவில் நிறுத்தி இதேபோல் செய்கிறார்களா?. அல்லது இது ஒரு பெண் குழந்தையின் இயல்பான குணமா?.

அவர்கள் பதில் இரண்டும்தான். கூடவே ஒரு பெண் தாய்மையை மிக விரும்புகிறாள் என்றும் பதில் அளித்தார்கள்.

ஆனால், ஆண்கள் கதை?. ஆண்களிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை.
பிற ஆண்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் நான் திருமணம் நிச்சயமான உடனேயே, நல்ல ஞானமுள்ள குழந்தை வேண்டி இறைவனை பிரார்த்திக்க ஆரம்பித்துவிட்டேன்.

குழந்தையிடம் சிறிது கூட முகம்கோன நான் ஒரு பொழுதும் விரும்பியதில்லை. சமத்து என்ற சொல்லை தவிர வேறு மாதிரி விளித்ததில்லை. அதனால் அவன் என்னிடம் மிக ஒட்டுதலாய் இருப்பான்.

எப்பொழுதும், என்னிடமே ஒட்டிக் கொண்டிருந்ததால், அவனுக்கு கங்காரு என ஒரு செல்லப் பெயரை எனது தாய்மாமன் வைத்தார். என்னப்பா ஏர்போட்ல இறங்கினதுக்கே இத்தனை பில்டப்பா. ஓக்கே, எனது கங்காரு சமத்து குறித்தும், பிற விடுமுறை அனுபவங்கள்/உணர்வுகள் தொடரும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Saturday, October 07, 2006

தேன்கூடு போட்டி/விடுதலை/மாணிக்கம்

சாடாரென்ற பேருந்து குலுக்கலில் புத்தகத்திலிருந்து விலகிய கண் அந்த பெரியவர் மீது பட்டது. முதுமைக்கே உரிய அடையாளங்களோடு எனது இருக்கைக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். நான் அமர்ந்திருந்தது ஜன்னலோர சீட். ஐயா இங்க உட்காருங்க என்று எழுந்து வெளியே நின்றேன்.

அடுத்த நிறுத்தத்தில் பெரியவருக்கு அருகில் இருந்தவர் இறங்கிக்கொண்டார். நான் பெரியவருக்கு அருகில் மீண்டும் புத்தகப் புழுவாய்.

தம்பிக்கு எந்த ஊரு?.
நெய்வேலி.
இன்னும் மூனு மணி நேரம் போனுமே. அடுத்த ஸ்டாப்புல இறங்கின பக்கத்து சீட்டுக்காரன் எந்திரிக்காதபோது, தம்பி டக்குனு எந்திரிச்சி நின்னீங்களே, சந்தோஷம். நான் புன்னகை; மீண்டும் புழு.

என்ன புத்தகம் தம்பீ?.
குண்டலீனி யோகம்.
தம்பி பேரு என்னா?.
முரளீ தரன்.
தம்பி ஐயமாருங்களா?.
நான் தலையசைத்தேன்.
ஐயரு புள்ளைங்கள்ளாம் தங்கமாத்தான் இருக்கு. என் பேரன் படிக்கிற ஸ்கூல்ல நாப்பது புள்ளைங்க. ஒரே ஒரு ஐயரு புள்ள ஆனால் அதுதான் எல்லாத்தலயும் முதலா நிக்குது.
நான் புன்னகை.
நம்ம ஊரு போஸ்ட்மாஸ்டர் ஐயர் புள்ள பாக்க உங்கள மாதிரித்தேன் இருக்கும், அன்னிக்கி பென்ஷன் வாங்கப் போனன், ஐயா மெட்ராஸ்ல வேலை கிடைச்சு போறன் ஆசீர்வாதம் பன்னுங்கன்னு நெடுஞ்சான்கிடையா கால்ல வுழுந்திருச்சு. நான் கலங்கிட்டன், நம்ம புள்ளைங்கதான் நம்மள மதிக்க மாட்டேங்குது. ஒருத்தன் குடிச்சி கூத்தடிக்கிறான், இன்னோருத்தன் கூத்தியா வெச்சுக்கிட்டு குடியழிக்கிறான்.
நான் பேசியாகவேண்டிய இக்கட்டில்; ஐயா வாத்தியாரா இருந்திங்களா?.
இல்ல தம்பீ.
போஸ்ட் ஆபிசுக்கு பென்ஷன் வாங்கப் போனதா சொன்னீங்க.
தியாகி பென்ஷன் தம்பி.
தியாகி பென்ஷனா?.
ஆமாம் தம்பி நான் ஐ என் ஏ-வுல இருந்தேன்.
ஐ என் ஏ-வுலயா?. உடம்பு சிலிர்த்தது. எப்படி சேர்ந்தீங்க?.

என் தாய் மாமன் மலேயாவுல இருந்தாரு. அவரு பொண்ண கல்யாணம் கட்டனும்னு மெட்ராஸ்ல இருந்து கப்பல் ஏறி மலேயா போனன். அவரு குடும்பத்தோட சேர்ந்து ரப்பர் தோட்டத்துல வேலை செஞ்சேன்.

அப்பத்தான் சண்டை வந்துடுச்சு. ப்ளேன்ல வந்து குண்டு போட்டாங்க. குண்டுபோட்டதுல என்மாமன் குடும்பம் மொத்தமும் அழிஞ்சுப் போச்சு.
நான் ஜனங்களோட ஜனங்களா சேந்து நடக்க ஆரம்பிச்சிட்டன்.

அப்பத்தான் ஐ என் ஏ வுல சேரச்சொல்லி எல்லாரையும் கூப்டாங்க.
நான் சேர்ந்துட்டேன். நான் இருந்த படைக்கு பேரு குரங்குப் படை.

குரங்குப் படையா?.

ஆமாம் மரத்துமேல ஏறி நின்னு, எதிரிங்க வர்ராங்களான்னு பாத்து, பின்னால வர்ர நம்ம ஆளுங்களுக்கு தகவல் சொல்லி விடனும். ப்ளேன்ல வந்து தொடர்ச்சியா குண்டு போட்டுகிட்டே இருந்தாங்க. தமிழருங்க அதுக்கெள்ளாம் பயந்துருவம்மா என்ன. ஆனால் நாங்க எல்லாம் சிதறிப்போய்ட்டோம். நேதாஜீ வேற என்ன ஆனாருன்னு தெரியல. கால்நடையா நடந்து கல்கத்தா வந்தோம். நேதாஜீ வீட்டுக்குப் போனோம்.
விடுதலை கிடைச்சிடுச்சுன்னாங்க.ஒரு அட்ட குடுத்தாங்க.

நானும், என் கூட்டாளி செஞ்சி பக்கத்துக்காரன் நாலு வருஷம் முன்னாடித்தான் செத்துப் போனான், ரெண்டு பேரும் கிளம்பி ஊருக்கு வந்து கல்யாணம் முடிச்சிட்டோம்.

ஐயா உங்கள சந்திச்சதுல ரொம்ப பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்குங்க.

ஆனா ஊருல எல்லாரும் இந்த கிழவன் பென்ஷன வாங்கிட்டு சொகுசா இருக்கறான்னு பேசறாங்கப்பா.

அவங்கள வுடுங்க ஐயா. விடுதலை கிடைச்சதும் உங்களுக்கு எப்படி இருந்தது?.

பெருசா ஒன்னும் தோனல தம்பீ. ஏன்னா தக்கடா ரஹோ-ன்னு நேதாஜீ இந்த மார்ல கை வச்சு சொன்னப்பவே ( மார்பில் ஓங்கி இரண்டு முறை அடித்துக் கொண்டார் ) விடுதலை கிடைச்சிட்டமாரி இருந்தது

நான் அவரைக் கண்டு உணர்வு தடுமாறி உட்காந்திருந்தேன்.

தம்பி நான் இறங்கர ஸ்டாப் வந்துடுச்சு என்று எழுந்து நடந்து போனார்.

ஐயா பேரு சொல்லாமப் போறிங்களே.

மாணிக்கம் என்றார், கம்பீரமாக.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்

Tuesday, October 03, 2006

தேன்கூடு போட்டி/விடுதலை

முரளி உன்னச் சொல்லி குத்தமில்லடா, உனக்கு மாசம் பதினஞ்சாயிரம் ரூவா சம்பாதிக்கர மாதிரி ஒரு வேலைய கொடுத்து, கிரண்பேடி வீட்டுக்கு பக்கத்தல பங்களாமாதிரி ஒரு வீட்ல சொகுசா தங்கவச்சாம் பாரு, நம்ம கம்பேனிக்காரன் அவன சொல்லனும்டா. மிதப்புடா,
சோத்துக்கு சிங்கி அடிச்சதும், வேலைக்கு நாயா அலைஞ்சதும் மறந்து போச்சா?. ... இது ராஜ்குமார்.

டேய் நீ சும்மா பொத்துரா, அவன் உசந்த விஷயத்த பத்தி பேசறான்..... இது இர்பான்.

உசந்த விஷயத்த பேசர அளவுக்கு இவன் ஒழுக்கமா? ஒரு நாளக்கி ஒரு பாக்கெட் சிகரெட்டு, வாரத்துக்கு நாலு தடவயாச்சும் ஜின்னுல எழுமிச்சம் பழத்த புழிஞ்சு சரக்கு. ஸ்டார் ஹோட்டல்ல சைட் டிஷ் வாங்காம
மட்ட ஊறுகாய நக்கிட்டு மானத்த வாங்குறவண்டா இவன்...இது ராஜ்குமார்.

ஆனா கவுச்சி சாப்பிடாமா கட்டுப்பாடாத்தான இருக்கான்....இது இர்பான்.

ஐயரு வூட்ல பொறந்திருந்தா நானும் அப்படித்தான் இருந்திருப்பேன். இந்த சண்டிகர் ஆபீசுல பொண்ணுங்ககிட்ட அதிக கடலை போடரது இவன்தாண்டா. அத்தன குட்டிகளுக்கும் இவனத்தான் புடிச்சிருக்காம், இவன் ஜென்டில் மேனாம். பஞ்சாப்புல குட்டிங்களுக்கு வெட்கம் மானமே கிடையாது....இது ராஜ்குமார்.

டேய் மசிராண்டி வாய மூடுறா, மரியாதை கெட்டுப்போய்டும்...உனக்கு அவங்களோட பேச ஹிந்தியும் வராது, இங்லீஷும் வராது, அந்த பொச்சரிப்புல பொண்ணுங்கள தப்பா பேசாத....இது நான்.

ஒக்கா மக்கா, நிறுத்துடா, யோக்கியன்மாரி பேசற. அன்னிக்கு சுக்னா லேக்காண்ட ஒரு பொண்ணு தெரியாம இடிச்சுட்டு போனப்பறம், மச்சான் மெத்துன்னு இருந்துதுடான்னு சொன்னவன்தாண்டா நீனு....இது ராஜ்குமார்.

ஆமாண்டா, உள்ளத சொன்னன், அதுக்காக நான் என்ன உன்னையமாரி நைட்டேல்லாம் நீலப்படம் பாத்தா அழிஞ்சிகிட்டு இருக்கேன்.
போடா வேலையப் பாத்துகிட்டு, நியாயம் பொளக்க வந்துட்டாரு....இது நான்.

எக்கேடும் கெட்டுப்போடா, நல்லா சமைச்சு நாலு வேலையும் நக்கர நாயி, நீயெல்லாம் திருவோடு ஏந்தப் போறன்னு சொன்னா எவன் நம்புவான். சாமியாராப் போரதா இருந்தா சீக்கிரம் போ. இருக்கறவன கிறுக்குப் புடிக்க வக்காத.....இது ராஜ்குமார்.

போத்தாண்டா போறன் என்று சொல்லி ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் இருப்பிடம் விட்டுப் போய் நின்ற இடம், ரிஷிகேஷ்.

ரிஷிகேஷில் முனி கீ ரேத்தீ என்ற இடத்தில் கால் பதித்தேன். பிறகு தேடியது சந்யாசம் வாங்க ஒரு வழியை. ஒரு மலை உச்சியில் இருந்த ஆஸ்ரமத்தில் வசித்த சாமியாரிடம் விஷயத்தைச் சொன்னேன்.

சாமி: ஏன் இந்த முடிவு?.
நான்: சாவு நிச்சயம்னு தெரிஞ்சுப்போச்சு, அதுக்கு முன்னால கடவுளை
உணர்ந்துடனும்னு நினைக்கிறேன்.
சாமி: எப்பேலேர்ந்து இந்த உணர்வு?.
நான்: அம்மாவோட மறைவுக்கு அப்பறம்.
சாமி: மயான வைராக்கியம் அதிக நாள் நிக்காது.
நான்: அது தொடக்கம்தான், தீவிரமானது அதுக்கு பிறகுதான்.
சாமி: எந்த அளவுக்கு தீவிரம்?.
நான்: குரு சிஷ்யன தண்ணியில அமுக்கி, வெளியில விட்டப்பறம், சிஷ்யன்
காத்துக்காக தவிச்ச தீவிரம். விவேகாநந்தர் கூட சொல்லியிருக்காரே;
தீவிரத்தோட அளவ பொறுத்து ஒரு மண்டலத்துக்குள்ளேயே இறை
அனுபவம் சாத்தியம்தான்னு.
சாமி: இது படிப்பறிவு.
நான்: அனுபவ அறிவும் உண்டு, காஞ்சி பரமாச்சாரியார் மூலமாக.
சாமி: தரிசனம் செஞ்சதுண்டா?.
நான்: குல குரு ஆனால் நேர்ல பார்த்தது கிடையாது. அவர் சமாதி ஆன
இரவு கனவுல வந்து ஆசீர்வாதம் பன்னிட்டு போனார். அந்த அனுபவம்
மட்டும் இல்லன்னா என்னிக்கோ நாத்திகன் ஆயிருப்பேன்.
சாமி: அப்ப தகுதி இருக்குன்னு நம்பற. வீட்ல அனுமதி
வாங்கியாச்சா?.
நான்: இல்ல, யார்கிட்டயம் சொல்லாம ஓடி வந்துட்டேன்.
சாமி: தப்பு, பெற்றோர்கள் சம்மதம் இல்லாம சன்யாசம் கொடுக்க மாட்டார்கள்.
நான்: சம்மதம் குடுப்பாங்கன்னு தோனல, ஆதி சங்கரை கூட அவங்க அம்மா
அனுமதிக்களையே அப்பறம் முதலை புடிச்ச நேரம்தான அனுமதிச்சாங்க.
சாமி: நீயே சொல்லிட்டியே, பெத்தவங்க அனுமதி முக்கியம்.
நான்: திரும்பி போற எண்ணம் இல்ல.
சாமி: சரி, ஒரு மூனு நாள் ஆஸ்ரமத்துல தங்கி இரு. நல்லா திரும்பவும்
யோசி. அப்பறம் பாக்கலாம்.

தினமும் காலையில் யோகாசனமும், பிரானாயாமமும் பிறகு நாள் முழுவதும் கங்கை கரையிலும், காடுகளுக்குள்ளும் அலைந்து திரிந்தேன்.
வீட்டை விட்டு ஓடி வந்து பண்டாரங்களாய் சுற்றியவர்களையும் சந்தித்தேன்.
அதில் ஒரு பண்டாரம் பாம்பு கடித்தால், உள்ளுக்கு வெத்தலையில் மிளகு வைத்து கொடுத்து, கடிவாயில் மிளகாயை அரைத்து தடவி கோழியோட
குதத்தை வைத்து அமுக்கினால், எரிச்சலில் குதம் இன்க் பில்லர் போல செயல்பட்டு விஷத்தை எடுத்துவிடும் என்று டிப்ஸ் வேறு கொடுத்தார். ஒரே தமாஷாக இருந்தது. இந்த விவாதமெல்லாம் நடந்த பொழுது இரவு மணி ஒன்று.
ராம் ஜூலாவிலிருந்து, நீல் கண்ட் வரை நடந்தே சென்றேன். எனது தகுதியைப் பற்றி நானே சுய விமர்சனம் செய்து கொண்டேன். நான் சந்நியாசி ஆவதற்கு தகுதியானவன்தான் என முழுதும் நம்பினேன். பூனூல் இரண்டாகப் பிரிக்கும் உடலின் கீழ் பகுதியில் உள்ள பசியையும், காமத்தையும் வென்று, மேல் பகுதியில் உள்ள இதயத்தையும், சுவாசத்தையும், அறிவையும் கட்டுக்குள் கொனர்ந்து கடவுளை உணர்ந்து விடலாம்.

அத்தனையும் மூன்றாவது நாள் காலைவரைதான். மலை மீதிருந்து கங்கையின் ஒட்டத்தை அவதானித்துக்கொண்டிருந்த பொழுது எனது பக்கத்தில் நின்று, என்னைப் பார்த்த ஜப்பானியப் பெண்ணின் புன்னகையில் அத்தனை வைராக்கியமும் அடித்துக்கொண்டு போய்விட்டது.

உள்ளேயிருந்து ஒரு குரல்; டேய் டேய் முரளி காமத்தை வெல்ல முடியலடா உன்னாள.

நான்: நான் திரும்பி போறன்.
சாமி: சரி போ, என்ன புரிஞ்சிகிட்ட?.
நான்: கடவுளை உணர்வதுக்கும், கடவுள் அருள் வேண்டும்.
அதுவரைக்கும் தாமர இலை தண்ணி மாதிரி வாழனும்.
விடுதலை சுலபமில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Saturday, July 29, 2006

மொழி ஒரு சாதனமா அல்லது ஆயுதமா

அன்பர்களே நண்பர்களே,
மொழி தொடர்பு கொள்வதற்கான ஒரு சாதனம்தான் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் நடைமுறையில், மொழி சாதனமாக மட்டும்தான் பெரும்பாலன நேரங்களில் பயன்படுத்தப் படுகிறதா என்ற ஒரு கேள்வி நான் எதிர்கொண்ட ஒரு சில நிகழ்வுகளின் ஊடே எனக்கு ஏற்ப்பட்டது.

முதலாவதாக நான் தற்காப்பு கலையான டேக்வாண்டோ கற்க சென்றபோது ஏற்பட்டது. வகுப்பில் சேரும்பொழுதே எனக்கு அரபி சுத்தமாக தெரியாது என்று புரிந்து கொண்டார்கள். எனக்கு, கேப்டன் ஹமாதா மற்றும் கேப்டன் பாசீம் என இரண்டு ஆசிரியர்கள்.
இதில் கேப்டன் ஹமாதாதான் பாசீமிற்க்கும் குரு.

ஹமாதா ஒரளவு ஆங்கிலம் பேசுவார் அதனால் என்னை வகுப்பில் உடனே சேர்துக்கொண்டார். இதில் பாசீமிற்கு உடன்பாடு இல்லை. நீ வகுப்பில் அரபியில்தான் பேச வேண்டும் என்ற ஒரு கட்டளையோடு எனைச் சேர்த்துக் கொண்டார். எனக்கு காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை சுற்றிய / வேலை பார்த்த / வசித்த அனுபவம் இருந்ததால் இந்திய மொழிகள் எதுவாயிருந்தாலும் சமாளித்து விடுவேன். ஆனால் அரபி?.

இந்த மொழிப் பிரச்சனையால் நிறைய கேலியும், கிண்டலும்
ஆரம்ப நாட்களில் சந்திக்க வேண்டி இருந்தது. ஆனால் அரபி தெரியாமலே என்னால் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேற முடிந்தது.

பிற்காலத்தில் எனது நலனில் அக்கறை கொள்ளும் மிக நல்ல நண்பராக பாசீம் ஆனார். யோசித்துப் பார்த்தால் ஆங்கிலம் தெரியாது என்ற அவரது இயலாமையை மறைக்கத்தான், அரபி மொழி ஆயுதம் கொண்டு எனை வதைத்தாரோ என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அவர் புண்ணியத்தில்தான் நான் நிறைய அரபி வார்த்தைகள் கற்க முடிந்தது.

அதேபோல் எனது வாடிக்கையாளர் ஒருவர் உள்ளார். அவர் எகிப்தியர் ( அரபியில் எகிப்தியர்களை மிசிறி என்பார்கள்) நன்றாக ஆங்கிலம் பேசுவார் ஆனால் செல்பேசியில் எனை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் மிக கடினமான அரபியில் சரளமாக பேச ஆரம்பித்து விடுவார். நான் பஞ்சாபிலும் உத்திர பிரதேசத்திலும் சுற்றி திரிந்த நாட்களில், சில வட இந்தியர்களை ஆங்கிலம் பேசி ( ஹிந்தி தெரிந்திருந்தாலும்) தவிர்த்ததுண்டு.
அட நம்ம டெக்னிக் நம்ம கிட்டயே ரிப்பீட் ஆகுதா என்று சிரித்துக் கொள்வேன்.

தமாம்-இல் வாழ்ந்த நாட்களில், எனது வேலைக்கு அரபி அத்தனை அவசியமாகப் படவில்லை. அங்கு வெளிநாட்டவர்களின் ஆதிக்கம் தொழிற்சாலைகளிலும், கடை வீதியிலும் அதிகம். ஜெத்தாவின் தொழிற்சாலைகளில் முக்கிய பதவிகளில் அரபி ஆட்கள் அதிகம்.

நேற்று, பாகிஸ்தானிலிருந்து உம்ராவிற்காக வந்திருந்த நண்பனின் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கடற்கரை மற்றும் கடைவீதியில் சுற்றித்திரிந்தேன் அப்போது ஒரு அரபி வியாபாரி என்னை அரபியில் பேசு அரபியில் பேசு என்று வற்புறுத்தியாதால் உருவான பதிவு இது.

அப்படியே நினைவுகளை தமிழகத்துக்கு திருப்புகிறேன். நிறைய வேற்று மாநில நண்பர்களுக்கு சென்னையின் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இதே மாதிரி கசப்பான அனுபவங்கள் மிக அதிகம். அத்தனையும் நம்ம அரசியல்வாதிகளால் உண்டாக்கப்பட்ட குழப்பங்கள். நம்ம நாடு திருந்தினாத்தானே அடுத்தவன குறை சொல்ல முடியும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Thursday, July 27, 2006

என்னை பாதித்த மஹான்கள் - சீரடி சாய்பாபா

அன்பர்களே நண்பர்களே,
கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நீண்ட நாள் தாக்குப் பிடிக்காது என்று ஒரு பழமொழி போல் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் இறை உணர்வும் இந்த வரையரைக்குள் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

அவரவர் இறை நம்பிக்கை அவரவர் சொந்த அனுபவத்தின் மீதுதான் வலுப்பெறும் என நினைக்கிறேன். வம்படியாக தானாகவே வலியவந்து என் வாழ்வில் புகுந்து சில அதிசய அனுபவங்களை விட்டுச் சென்றவர் சீரடி சாய்பாபா அவர்கள்.

எனக்கு சீரடியாரைப்பற்றி ஏதும் தெரியாத ஒரு கால கட்டத்தில், கடல் கடந்து வேலைக்கு செல்ல வேண்டுமா என என்னுள் ஒரு குழப்பம் நிலவிய மன நிலையில் ஒரு கனவு வந்தது. நான் ஒரு மலைகள் சூழ்ந்த பகுதியில் வழி தடுமாறி குழம்பி நிற்பதும், அங்கே வரும் பாபா எனக்கு
சரியான பயணத் திசையை காட்டுவதுமாக இருந்தது அக்கனா.

சரிதான், பாபாவே கை காட்டிய பிறகு வேறென்ன வேண்டும் என கிளம்பி ஜெத்தா வந்தால், நான் கனவுல பார்த்ததும்; பாபா கை காட்டியதுமான
ஊர் ஜெத்தாதான். நினைத்துப் பாருங்கள் எனக்கு எப்படி இருந்திருக்கும்.

அப்பறம் நான் பாம்பே போயிருந்தபோது அங்கிருந்து சீரடிக்கு சென்று பாபாவின் சமாதி+கோவிலை தரிசித்து வந்தேன். அங்கு ஒரு அதிசயமான விஷயம் சொன்னார்கள். சீரடி சாயிபாபா இந்துவா / முஸ்லீமா
என்று குழப்பமாகவே இருந்ததாம். அதனால் அவர் உயிர் நீத்த பின் ஒரு சாரார் உடலை புதைக்க வேண்டும் என்றும்/ ஒரு சாரார் உடலை எரிக்க வேண்டும் எனவும் வலியுருத்தினார்களாம்.

அவர் உடலை மூடியிருந்த துணியை அகற்றினால்; உடல் பூக்களாக மாறிப் போயிருந்ததாம். தான் பூவாக மாறி இந்து/முஸ்லீம் உள்ளங்களில் அன்பு மலரச் செய்தவர்.

ஓம் சாய் நமோ நமோ; ஷ்ரீ சாய் நமோ நமோ
ஜெய ஜெய சாய் நமோ நமோ; சத்குரு சாய் நமோ நமோ.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Saturday, July 22, 2006

என்னை பாதித்த மஹான்கள்-ராகவேந்திரர்

நான் எங்கு அழைத்தாலும் நீ அங்கு வர வேண்டும்,
நான் எங்கு இருந்தாலும் உன் அருள் வேண்டும்,
புவனகிரி பிறந்தவரே மந்த்ராலய மஹான் - ராகவேந்திரா.......

ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த வரிகளை முதல் அடிகளாக கொண்ட பாடல், ராகவேந்திர மஹானின் பிறந்த இடமான புவனகிரியில் அமைந்த கோவிலில் பாடப்படும் பொழுது நான் அடையும் ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. ராகவேந்திரரின் அருள் எனக்கு எப்பொழுதும் உண்டு என முழுமையாக நம்புபவன் நான்.

ராகவேந்திரரின் அவதார ஸ்தலமான புவனகிரி, சிதம்பரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கடலூர் செல்லும் சாலையில் உள்ளது. அவர் பிறந்த வீட்டையே கோவிலாக மாற்றி உள்ளார்கள். அவர் பிறந்த இடத்தைப் பற்றி நிறைய குழப்பங்கள் இருந்ததாகவும், காஞ்சி மஹாபெரியவர்தான் பல்வேறு ஆதாரங்கள் கொண்டு, புவனகிரிதான் என நிரூபித்ததாகவும் சொல்வார்கள்.

நான் சவுதி வேலைக்கு வருவதற்காக விண்ணப்பத்தை அவர் காலடியில் வைத்து ஆசி பெற்று அனுப்பியது நினைவுக்கு வருகிறது.
அவரது படம் ஒன்றையும் கூடவே சவுதிக்கு கொண்டு வந்தேன். விமான நிலையத்தில் எனது உடமைகளை சோதித்த ஒரு குடியேற்ற அதிகாரி அந்த படத்தை அனுமதிக்க மறுத்து தன்னிடம் எடுத்து வைத்துக்கொண்டார். நான் அவர் கண்களை ஊடுருவிப் பார்த்தபடியே, அவரிடமிருந்து திரும்ப எடுத்து
கொண்டேன். என்ன நினத்தாரோ தெரியவில்லை, என்னை எடுத்துச் செல்ல அனுமதித்து விட்டார். ராகவேந்திரர் டாலர் கோர்த்த துளசி மாலை ஒன்று எனது காரில் எப்பொழுதும் தொங்கிக்கொண்டிருக்கும்.

சில பேர் பயமுறுத்திக்கொண்டே இருப்பார்கள். முரளி மாலையக் கழட்டு போலிஸ் பார்த்தா பிரச்சனை ஆயிடும். இதெல்லாம் இங்க அனுமதி கிடையாது. எக்சிட் அடிச்சி விட்ருவாங்க. அதுவே ராகவேந்திரர் விருப்பமாயிருந்தால் அப்படியே நடக்கட்டும் என்று நானும் தினமும் பல செக் போஸ்ட்களை தாண்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Thursday, July 20, 2006

என்னை பாதித்த மஹான்கள்-ஓஷோ

லெபனானில், குண்டு வீச்சில் மூன்று இந்தியத் தொழிலாளர்கள் பலி. படித்தவுடன் துக்கம் தொண்டையை அடைத்தது. எந்த நரைத்த முடியினரின் ஊன்றுகோல் உடைந்ததோ. யார் குங்குமத்தை தொலைத்தாரோ! எந்த குழந்தைகள் நல்லாசிரியரை இழந்தனரோ! எந்த முதிர் கன்னி நம்பிக்கையை இழந்தாளோ! எண்ணிலாக் கேள்விகள் என்னுள்ளே.

எண்ணை வளம் கொழிக்கும் இஸ்லாமிய நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களில் பெரும்பான்மையானோர் தொழிலாளர் வர்கத்தினரே. மேலே குறிப்பிட்ட குடும்பத்தோரின் நலன்களுக்காக தங்கள் சுகவாழ்வை அடமானம் வைத்தவர்கள். டாலர் தேச வெள்ளை சட்டைப்பட்டை தொழிலாளர்களுக்கும் இவர்களுக்கும் வசதியிலும், வாழும் முறையிலும் உள்ள வித்தியாசம் பசுமைக்கும் பாலைக்கும் உள்ள வித்தியாசம்.

இங்கு வேலைக்கு வந்த புதிதில் பார்ப்பவரிடமெல்லாம் புலம்பித்
தள்ளுவதுண்டு.

பாய் எப்படி பாய் இத்தனை நாள் தாக்குப் புடிச்சிங்க? நான் இந்த முறை ஊருக்குப் போய் அங்கேயே உட்காந்துரலாம்னு இருக்கேன்.

முரளி நாங்களும் வந்த புதுசுல இப்படியெல்லாம் யோசிச்சவங்கதான் எல்லாம் கொஞ்சம் நாளானா சரியாயிடும் என்ற ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கும்.

பல பேர் குடும்ப நலன்களுக்காக பெற்றோரின் அன்பையும், மனைவியின் அன்மையையும், குழந்தைகளின் அந்நியோன்யத்தையும் தியாகம் செய்தவர்கள்தான். ஒரு அஞ்சு வருசம் இருந்துட்டு போயிடலாம் என்று வந்துவிட்டு பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதர்க்காக கால நீட்டிப்பு செய்துகொண்டே போகிறவர்கள்தான்.

சந்ததினையினரின் சாதனைக் கனவுகளுக்காக, தங்களின் வாழ்க்கைப் பயனத்தை பாலைவனத்தில் தொடர்ந்த சாதனையாளர்களின் மரணத்ததிற்கு
எனது அஞ்சலிகள்.

இதுல ஓஷோ எங்கேயிருந்து வந்தார் என தேடுபவர்களுக்கு; ஒரு பாலைவனத் தொழிலாளியான நான் எனது மகனை தாய் நாட்டில் விட்டு தனியே திரும்பிய பொழுது ஏற்பட்ட உணர்ச்சிகளை பதிய ஒரு தனி பதிவு போட வேண்டும். எனது மகன் பெயர் ஓஷோ.

ஓஷோவின் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் என் மனதில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியதால் என் மகன் பெயர் ஓஷோவானது. ஓஷோ என்ற பதத்திற்க்கு அழகான பொருளும் உண்டு.
வானத்தால் ( இறையால்) பூச்சொரிந்து ஆசீர்வதிக்கப்பட்டவர் மற்றும் இறைத்தன்மையில் கரைந்தவர். கூடவே ஒரு செய்தி எனது மகனுக்கு இன்று பிறந்த நாள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Monday, July 17, 2006

என்னை பாதித்த மஹான்கள்

அன்பர்களே நண்பர்களே,
இந்த நிலை இல்லா வாழ்க்கையில் உழன்று, மாண்டு பிறறால் மறக்கப்பட்டவர்கள் ஏராளம். விஞ்ஞாநிகள், புவி ஆண்ட மன்னவர்கள், இலக்கிய கர்த்தாக்கள், கவிகள், கலைஞர்கள், சீர்திருத்தவாதிகள், பெரும் போராளிகள், சாதனையாளர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற முத்திரைகளை பதித்து, மாண்டு பிறறால் மறக்க முடியாதவர்களும் ஏராளம்.
வலிந்து அதிகார வர்கத்தால் மறக்கடிக்கப்பட்டவர்களும் ஏராளம் ( உதாரனம் தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள்). ஆனால் வாழ்ந்த காலத்தில் அன்பாய் மலர்ந்து, அன்பின் மணத்தைப் பரப்பி, சமூகத்தை மலர்ச்சியாக வைத்திருந்து, இப்பொழுதும் வாழ்கிறார்கள் என மானிடர்களால் நம்பப்படும் மாமுனிகள் எப்பொழுதும் எனக்கு ஒரு ஆச்சரியமாகவே இருந்திருக்கிறார்கள்.

அதுவும் நமது இந்திய சமூகத்தில் ( எதுக்கு வம்பு, திராவிட சமூகத்தில் கூட) இத்தகைய புண்ணிய ஆத்மாக்கள் மிக அதிகம். அதனால்தான் நமது தேசத்தை புண்ணிய தேசம் என்று அழைக்கிறார்கள் என நினைக்கிறேன். இத்தகையப் பெரியோர்கள் இந்து இஸ்லாமிய கிருஸ்துவ சீக்கிய பார்சி புத்த ஜைன( பாத்தீங்களா பாத்தீங்களா ஒரு கமா கூட நம்மை பிரிப்பதை நான் விரும்பவிலை) மதங்களின் பின்னனியில் வந்திருந்தாலும், அவர்களின் மதப் பின்னனி புறந்தள்ளப்பட்டு மாந்தர்களால் கொண்டாடப்படுகிறார்கள்.

இவர்களில் நான் உணர்ந்த சிலரைப்பற்றி இனி வரும் நாட்களில் பதிவு செய்வேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Sunday, July 16, 2006

SRI LANKA

Monday, June 19, 2006

SRI LANKA
It is very painful to watch the happenings in srilanka. My roommate is an sinhala, he always use the term terrorist to mention LTTE. If i ask him why not srilanka allow to form a federal goverment in north. He refuses because srilanka is small country and they don't want to divide it for any reason and any form. He also says in such a situation all the tamils in south srilanka has to go back to north or they should be killed. His openions are very harsh always. He identify himself as JVP. I can understand his emotions because his brother is working in army.I remember a news published in some tamil magazine longtime back. Some people approched a holyman ( chithar ) while freedom struggle started in srilanka and asked them to foresee the result of the struggle?. He said that the hole country will become graveyard nothing more will happen. That is what we see in the past 25 years.

IS THEIR ANY PERMANENT SOLUTION?. SHARE YOUR VIEWS.

அம்மா வருவா

Friday, July 07, 2006

தேன்கூடு - போட்டி. அம்மா வருவா.

தான் ஏன் ஜோசியம் ஜாதகம் எல்லாம் கற்றோம் என்று தாத்தா வாழ்க்கையில் முதல் முறையாக வேதனைப்பட்டார். இருக்காதா பின்னே இந்த வயதில் தான் ஆரோக்கியமாக இருக்க தன் மகளுக்கு இப்படி ஒரு கொடிய நோயை பகவான் கொடுக்க வேண்டுமா அதுவும் இல்லாமல்,இருப்பாளா போய்டுவாளா என்று தானே ஜாதகத்தை ஆராயவேண்டிய நிலைமை வேறு. தாத்தா ஜாதக கட்டங்களை மேய்ந்தார், பஞ்சாங்கத்தை பார்த்தார். அமாவாசைக்கு முன்னே ஒரு பெரிய கண்டம் இருக்கு, கஷ்டம்தான் என்றார் குரல் நடுங்க. கூடியிருந்த பெண்கள் விசும்ப ஆரம்பித்து விட்டனர். கொஞ்சம் குரல் உயர்த்தி அழ ஆரம்பித்த ஒரு சகோதரியை மாமா முறைக்க அவர் சட்டென்று கூடத்தை விட்டு வெளியேறி வாசலில் சென்று அழுதார். இதை எதுவும் உனர முடியாதவளாக, மருந்துகள் தந்த ஆழ்ந்த மயக்கத்தில் உள் அறையில் உறங்கிகொண்டிருந்தாள் அம்மா.

நான் மெலிதாக மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். கண்டமாம் கண்டம்; அம்மா என்னை பார்க்கும் போதெல்லாம் சிரிக்கிறா அவ நிச்சயமா பழையபடி எழுந்து உட்காந்து இன்னும் பலமாக சிரிக்கத்தான் போறா.

தேவராஜன் ரொம்ப அதிகமா பரவிடுத்து, மனுஷ யத்தநத்துல முடியாது, அதிகமா ஆறு மாசம் அதுக்குமேல பகவானோட க்ருப என்று மாமாவிடம் தனியறையில் சென்னை டாக்டர் சொன்னதை கேட்டபோதும் இப்படித்தான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். லூசு மாதிரி பேசறான் இந்த டாக்டர், ஆப்பரேஷன் பன்ன காயமெல்லாம் ஆறி பழையபடி சைக்கிள் ஓட்டத்தான் போறா அம்மா.


நாலு மாசத்துக்கு முன்ன இப்படித்தான் சில சொந்தக்காரா பேசிண்டு இருந்தா; முரளியோட ஜாதகப் பிரகாரம் இந்த வயசுல பத்மாவ ரொம்ப படுத்துமாம். டேய் முரளி பக்கத்துல இருக்கர கோயிலுக்கு போய் டெய்லி கார்தால விஷ்னு சகஸ்ரநாமம் சொல்லுடா......... இவாள்ளாம் ரொம்பத்தான் அலட்ரா என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். ஆனால் தினமும் காலையில் விஷ்னு சகஸ்ரநாமம் சொல்ல தவறியதில்லை. அம்மா எழுந்து வந்து செவ்வா வெள்ளி குத்துவெளக்கு பூஜை,விரதம் வாரம்னு அதம் பன்னத்தான் போறா.

அவ போயிட்டான்னா நானும் இந்த பாஷாநத்த சாப்டுட்டு அவளோடவே போயிடுவேன் என்று அழுத அப்பாவிடம் இருந்து விஷப்பொட்டலத்தை பிடுங்கி எறிந்து விட்டு பாட்டி அண்ணா அக்கா எல்லோரும் அழுத போது மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்;அப்பா,நல்லா இருந்த போதுல்லாம் நரசிம்மமூர்த்தி மாதிரி கோபப்பட்டு அம்மாவ அடி உதனு கொடுமப்படுத்திட்டு இப்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியா?. ஒன்னும் ஆயிடாது அவளுக்கு. தான் எத்தனத்தான் கஷ்டப்பட்டாலும் அத எல்லாம் தொடச்சி எரிஞ்சிட்டு ஊருக்கள்ளாம் நல்லது பன்றவ அவ. அதையெல்லாம் தொடர்ந்து செய்யத்தான் போறா.

அம்மா பெட்டுக்கு பக்கத்தில் ஒரு புழுவப் பார்த்தேன். இது எப்படி இங்க வந்தது! அம்மா பார்த்தா பயப்படபோறா....ஒரு பேப்பரை அதன்மேல் போட்டு பிடித்து எடுத்துச் சென்று வெளியே எறிந்தேன். நாலு அஞ்சுன்னு பார்த்த பிறகு பாட்டிகிட்ட விஷயத்த சொன்னேன். பாட்டி அம்மாவப் போய் பாத்துட்டு வந்து பக்கத்து வீட்டுக்கு போய் பெருங்குரலெடுத்து அழுதா, ஒரு சின்ன புழு பூச்சிக்கு கூட கெடுதல் நினைக்காத மனசு அவளுக்கு, புத்து வச்சதுமில்லாம புழு புளுத்துப்போச்சே....சேச்சே இதுக்கு போய் ஏன் அழறா? மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். டெட்டால் போட்டு சுத்தம் பன்னிட்டாபுழு எல்லாம் செத்து போயிடும். அம்மா எழுந்து வருவா, தினமும் காலையில் வீட்டை மெழுகி சுத்தமா மடி ஆச்சாரமா இருக்கத்தான் போறா.

ஏதோ பச்சிலை வைத்தியமாம், அலோபதி கைவிட்டுட்டாக்கூட முயற்சிபன்னி பாக்கலாமாம். அம்மா நெய்வேலி விட்டு தஞ்சாவூர் போய்விட்டாள் வைத்தியத்திற்காக. புயலில் விழுந்து விட்ட மரங்களை அப்புறப்படுத்துவதற்காக நான் வீட்டிலே இருந்தேன். என்ன இது வேலை இழுத்துக்கொண்டே இருக்கிறது, நான் அம்மாவ பார்கபோவதிற்குள் அம்மா உடம்பு சரியாகி வந்து விடுவாள் போலிருக்கிறது, மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.

தஞ்சையிலிருந்து போன், பணத்தேவை இருக்கிறது, மரம் விற்ற காசை எடுத்துக்கொண்டு வரவும். பஸ் தஞ்சையை நெருங்க நெருங்க பெரிய கோவிலின் கோபுரத்தை வைத்த கண் விட்டு விலகாமல் பார்துக்கொண்டே சென்றேன். திடீரென்று உடம்பும் மனதும் நடுங்க ஆரம்பித்து விட்டது. ஏன் என்ற காரனமும் உடனே புரிந்து விட்டது.சிவ பஞ்சாட்சரத்தை தொடர்ச்சியாக உச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன்.அம்மா ஆகாசத்தில் தெரிகிறாளா என்று சித்தி வீடு சென்று சேரும்வரை தேடிக்கொண்டே இருந்தேன். மூலிகை வைத்தியசாலையில் இருந்து சித்தியையும் என்னையும் அழைத்து செல்ல கார் வந்திருந்தது. பணத்தை காலையில் எடுத்து செல்லலாம் என்று சொன்ன சித்தியிடம் மறுத்து கையோடு எடுத்து சென்றேன். அம்மா பெட்டிற்கு சிறிது தூரம் நின்றிருந்த அப்பா; பத்மா போயிட்டா என்று அழ; சித்தி மயங்கி விழ; நான் மட்டும் போகும்பொழுது என்னை உலுக்கிவிட்டுச் சென்ற அம்மாவை நினைத்துமனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

எனக்கு திருமணமாகி மனைவி சூல்கொண்டதும், எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்ற என்னை மனைவி அதிசியமாகப் பார்த்தாள். ஆனால் தலைச்சன் ஆண். அதனால்எ ன்ன இந்த முறை நிச்சயம் அம்மா வருவா.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Saturday, July 15, 2006

1. இறை வணக்கம்

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்ட ரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே.