Friday, July 07, 2006
தேன்கூடு - போட்டி. அம்மா வருவா.
தான் ஏன் ஜோசியம் ஜாதகம் எல்லாம் கற்றோம் என்று தாத்தா வாழ்க்கையில் முதல் முறையாக வேதனைப்பட்டார். இருக்காதா பின்னே இந்த வயதில் தான் ஆரோக்கியமாக இருக்க தன் மகளுக்கு இப்படி ஒரு கொடிய நோயை பகவான் கொடுக்க வேண்டுமா அதுவும் இல்லாமல்,இருப்பாளா போய்டுவாளா என்று தானே ஜாதகத்தை ஆராயவேண்டிய நிலைமை வேறு. தாத்தா ஜாதக கட்டங்களை மேய்ந்தார், பஞ்சாங்கத்தை பார்த்தார். அமாவாசைக்கு முன்னே ஒரு பெரிய கண்டம் இருக்கு, கஷ்டம்தான் என்றார் குரல் நடுங்க. கூடியிருந்த பெண்கள் விசும்ப ஆரம்பித்து விட்டனர். கொஞ்சம் குரல் உயர்த்தி அழ ஆரம்பித்த ஒரு சகோதரியை மாமா முறைக்க அவர் சட்டென்று கூடத்தை விட்டு வெளியேறி வாசலில் சென்று அழுதார். இதை எதுவும் உனர முடியாதவளாக, மருந்துகள் தந்த ஆழ்ந்த மயக்கத்தில் உள் அறையில் உறங்கிகொண்டிருந்தாள் அம்மா.
நான் மெலிதாக மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். கண்டமாம் கண்டம்; அம்மா என்னை பார்க்கும் போதெல்லாம் சிரிக்கிறா அவ நிச்சயமா பழையபடி எழுந்து உட்காந்து இன்னும் பலமாக சிரிக்கத்தான் போறா.
தேவராஜன் ரொம்ப அதிகமா பரவிடுத்து, மனுஷ யத்தநத்துல முடியாது, அதிகமா ஆறு மாசம் அதுக்குமேல பகவானோட க்ருப என்று மாமாவிடம் தனியறையில் சென்னை டாக்டர் சொன்னதை கேட்டபோதும் இப்படித்தான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். லூசு மாதிரி பேசறான் இந்த டாக்டர், ஆப்பரேஷன் பன்ன காயமெல்லாம் ஆறி பழையபடி சைக்கிள் ஓட்டத்தான் போறா அம்மா.
நாலு மாசத்துக்கு முன்ன இப்படித்தான் சில சொந்தக்காரா பேசிண்டு இருந்தா; முரளியோட ஜாதகப் பிரகாரம் இந்த வயசுல பத்மாவ ரொம்ப படுத்துமாம். டேய் முரளி பக்கத்துல இருக்கர கோயிலுக்கு போய் டெய்லி கார்தால விஷ்னு சகஸ்ரநாமம் சொல்லுடா......... இவாள்ளாம் ரொம்பத்தான் அலட்ரா என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். ஆனால் தினமும் காலையில் விஷ்னு சகஸ்ரநாமம் சொல்ல தவறியதில்லை. அம்மா எழுந்து வந்து செவ்வா வெள்ளி குத்துவெளக்கு பூஜை,விரதம் வாரம்னு அதம் பன்னத்தான் போறா.
அவ போயிட்டான்னா நானும் இந்த பாஷாநத்த சாப்டுட்டு அவளோடவே போயிடுவேன் என்று அழுத அப்பாவிடம் இருந்து விஷப்பொட்டலத்தை பிடுங்கி எறிந்து விட்டு பாட்டி அண்ணா அக்கா எல்லோரும் அழுத போது மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்;அப்பா,நல்லா இருந்த போதுல்லாம் நரசிம்மமூர்த்தி மாதிரி கோபப்பட்டு அம்மாவ அடி உதனு கொடுமப்படுத்திட்டு இப்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியா?. ஒன்னும் ஆயிடாது அவளுக்கு. தான் எத்தனத்தான் கஷ்டப்பட்டாலும் அத எல்லாம் தொடச்சி எரிஞ்சிட்டு ஊருக்கள்ளாம் நல்லது பன்றவ அவ. அதையெல்லாம் தொடர்ந்து செய்யத்தான் போறா.
அம்மா பெட்டுக்கு பக்கத்தில் ஒரு புழுவப் பார்த்தேன். இது எப்படி இங்க வந்தது! அம்மா பார்த்தா பயப்படபோறா....ஒரு பேப்பரை அதன்மேல் போட்டு பிடித்து எடுத்துச் சென்று வெளியே எறிந்தேன். நாலு அஞ்சுன்னு பார்த்த பிறகு பாட்டிகிட்ட விஷயத்த சொன்னேன். பாட்டி அம்மாவப் போய் பாத்துட்டு வந்து பக்கத்து வீட்டுக்கு போய் பெருங்குரலெடுத்து அழுதா, ஒரு சின்ன புழு பூச்சிக்கு கூட கெடுதல் நினைக்காத மனசு அவளுக்கு, புத்து வச்சதுமில்லாம புழு புளுத்துப்போச்சே....சேச்சே இதுக்கு போய் ஏன் அழறா? மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். டெட்டால் போட்டு சுத்தம் பன்னிட்டாபுழு எல்லாம் செத்து போயிடும். அம்மா எழுந்து வருவா, தினமும் காலையில் வீட்டை மெழுகி சுத்தமா மடி ஆச்சாரமா இருக்கத்தான் போறா.
ஏதோ பச்சிலை வைத்தியமாம், அலோபதி கைவிட்டுட்டாக்கூட முயற்சிபன்னி பாக்கலாமாம். அம்மா நெய்வேலி விட்டு தஞ்சாவூர் போய்விட்டாள் வைத்தியத்திற்காக. புயலில் விழுந்து விட்ட மரங்களை அப்புறப்படுத்துவதற்காக நான் வீட்டிலே இருந்தேன். என்ன இது வேலை இழுத்துக்கொண்டே இருக்கிறது, நான் அம்மாவ பார்கபோவதிற்குள் அம்மா உடம்பு சரியாகி வந்து விடுவாள் போலிருக்கிறது, மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.
தஞ்சையிலிருந்து போன், பணத்தேவை இருக்கிறது, மரம் விற்ற காசை எடுத்துக்கொண்டு வரவும். பஸ் தஞ்சையை நெருங்க நெருங்க பெரிய கோவிலின் கோபுரத்தை வைத்த கண் விட்டு விலகாமல் பார்துக்கொண்டே சென்றேன். திடீரென்று உடம்பும் மனதும் நடுங்க ஆரம்பித்து விட்டது. ஏன் என்ற காரனமும் உடனே புரிந்து விட்டது.சிவ பஞ்சாட்சரத்தை தொடர்ச்சியாக உச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன்.அம்மா ஆகாசத்தில் தெரிகிறாளா என்று சித்தி வீடு சென்று சேரும்வரை தேடிக்கொண்டே இருந்தேன். மூலிகை வைத்தியசாலையில் இருந்து சித்தியையும் என்னையும் அழைத்து செல்ல கார் வந்திருந்தது. பணத்தை காலையில் எடுத்து செல்லலாம் என்று சொன்ன சித்தியிடம் மறுத்து கையோடு எடுத்து சென்றேன். அம்மா பெட்டிற்கு சிறிது தூரம் நின்றிருந்த அப்பா; பத்மா போயிட்டா என்று அழ; சித்தி மயங்கி விழ; நான் மட்டும் போகும்பொழுது என்னை உலுக்கிவிட்டுச் சென்ற அம்மாவை நினைத்துமனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.
எனக்கு திருமணமாகி மனைவி சூல்கொண்டதும், எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்ற என்னை மனைவி அதிசியமாகப் பார்த்தாள். ஆனால் தலைச்சன் ஆண். அதனால்எ ன்ன இந்த முறை நிச்சயம் அம்மா வருவா.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
Sunday, July 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment