Saturday, March 24, 2007

கார்த்தி சிதம்பரம்.

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள்" அப்படித்தான் இருந்தது திரு. கார்த்தி சிதம்பரம் அவர்களின் பேச்சு. அப்பாவைப் போன்றே உயரம், மீசையற்ற முகம், தோற்றம்.
அவரது அறிவுச் செறிவு அவரது பேச்சில் தெரிந்தது.

ஜெத்தா வாழ் தமிழர்கள் இணைந்து gulf residents indian tamils ( GRIT ), வளைகுடா வாழ் தமிழர் அமைப்பு என்றொரு அமைப்பை துவக்கியுள்ளார்கள். இந்த அமைப்பை துவக்கி வைக்க, சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் திரு.கார்த்தி சிதம்பரம். மேதகு இந்தியத் தூதர் திரு.பாரூக் மரைக்காயர் அவர்களும், இணைத்தூதர் திரு அவுசப் சயீத் அவர்களும் அமைப்பை வாழ்த்தி, ஆலோசனை நல்கினார்கள்.

அமைப்பை குத்து விளக்கு ஏற்றியும், இணைய தளத்தை சொடுக்கியும் துவக்கி வைத்தார் திரு கார்த்தி சிதம்பரம். GRIT என்னும் இந்த அமைப்பு GUIDE, GROW, GAIN என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.

GRIT அமைப்பை வாழ்த்தி, சில ஆலோசனைகளையும் வழங்கினார் திரு.கார்த்தி சிதம்பரம். மேலும் இந்தியாவைப் பற்றியும், இந்தியாவின் வளர்ச்சி பற்றியும் பொதுவான சில விஷயங்களை பேசினார்.
அதில் நான் கிரஹித்தவை.

1. இந்த நூற்றாண்டில் உலகப் பொருளாதார மையங்களாக, வலுவான
சக்தியாக இந்தியாவும், சைனாவும் இருக்கும்.

2. பல்வேறு பிரிவுகளை கொண்ட இந்தியாவில் சமூக, பொருளாதார,
மாற்றங்கள் மிக மெதுவாகவே நடந்து வருகிறது. ஆனால் முந்தைய
பல ஆண்டுகளை ஒப்பிட்டால், கடந்த பதினாறு வருடங்களில் இந்த
மாற்றம் துரிதமடைந்துள்ளது.

3. மிகச் சாதாரண பின்புலத்திலிருந்து வந்த சிவ நாடார், நாராயண மூர்த்தி
போன்றோர், தங்கள் அறிவுத்திறன் ஒன்றையே மூலதனமாக கொண்டு
பெரும் தொழில் அதிபர்களாக மாறி சாதனை படைத்து, இளைய தொழில்
முனைவோருக்கு முன் மாதிரியாக உள்ளார்கள்.
அத்தகைய வாய்ப்புகள் நிறைந்த சூழ்நிலைகளை கொண்டதாக இன்றைய
நாட்களில் இந்தியா உள்ளது.

4. உள் கட்டமைப்பில் சிங்கப்பூர், சவுதி அரேபியா போலெல்லாம் இந்தியா
எப்பொழுது மாறும் எனச் சிலர் கேட்கிறார்கள். இந்தியாவை
இந்த நாடுகளோடு ஒப்பிடுவதே தவறு. ஏனென்றால்
இந்தியா மிகப் பெரிய நாடு. ஆனாலும் இன்னும் ஒரு
இருபத்தைந்து வருடங்களுக்குள் நாம் அதை சாதிக்க முடியும்.

5. GRIT அமைப்பின் சார்பாக micro investment என்ற ஒரு சித்தாந்தத்தின்
அடிப்படையில் அனைத்து தமிழர்களின் முதலீட்டில் ஒரு மருத்துவனை
தொடக்க நிலையில் உள்ளது.
அதேபோன்ற சீரிய முயற்சிகள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும்
என்றும் , மேலும் gulf residents indian tamils என்பதிலிருந்து
gulf residents indians என்றொரு பரந்துபட்ட தளத்திற்கு இந்த அமைப்பு
மாறவேண்டும் என்ற மேதகு இந்திய தூதுவர் திரு.பரூக் மரைக்காயர்
மற்றும் இணைதூதர் திரு.அவுசப் சயீத் அவர்களின் ஆலோசனையை
வழிமொழிந்தார் திரு.கார்த்தி சிதம்பரம்.

6.மேலும் வளைகுடாவாழ் தொழிலாளர்களின் பிரச்சனைகளை குறித்தும்
இனி வேலைவாய்ப்பு தேடி தமிழகத்திலிருந்து வருபவர்களுக்கு
விழிப்புணர்வினை ஊட்டவும், GRIT அமைப்பின் பிரிவு, தமிழக
நகரங்களான சென்னை, திருச்சி மற்றும் மதுரையில்
துவக்கப்படவேண்டும் என்ற தனது அவாவினையும் வெளியிட்டார்
திரு. கார்த்தி சிதம்பரம்.

7. NRI களுக்காக ஐந்து சதவீத இட ஒதுக்கீடு, இந்திய கல்வி
நிறுவனங்களில் சரியானபடி அமல்படுத்தப்படுவதில்லை என்ற
குறைபாட்டிற்கு பதில் அளிக்கையில், இது சம்பந்தமாக GRIT தனது
கோரிக்கையை தொடர்ந்து இந்திய அரசியல்வாதிகளிடம், அதிகார
வர்கத்தினரிடமும் வலியுருத்தலும், நினைவுருத்தலும் செய்யவேண்டும்
என கேட்டுக்கொண்டார். ஏனென்றால் இட ஒதுக்கீடு போன்ற
விஷயங்கள் இந்தியாவில் பல சிக்கல்கள் நிறைந்த விஷயமாக
உள்ளதால் சற்றே மெதுவாகத்தான் மாற்றங்கள் வரும் என்றார்.

8. அதே நேரத்தில் same side goal போடவும் தவறவில்லை.இந்தியாவில்
அரசியலும், அதிகார வர்கமும் ஒரு கசியும் குழாயைப்போல்
உள்ளதால், எந்த செயலையும் முன்னெடுத்துச் செல்வதில் வேகம்
மிதமாகவே உள்ளதாக குறைபட்டுக்கொண்டார் ( நகைச்சுவை).

9. இந்தியாவை ஒரு யானைக்கு உருவகப்படுத்தினார். இந்திய
பொருளாதரத்தைச் சொன்னாரா, அரசியலைச் சொன்னாரா,
ஒட்டு மொத்த இந்தியாவின் குணநலத்தைச் சொன்னாரா என்பதை நான்
சரியாக உள் வாங்கவில்லை. யானை பலம் வாய்ந்த பிரானியாக
இருந்தாலும், சில நேரங்களில் நம்மிடமிருந்து வாழைப்பழம் வாங்கி
தின்னும் அளவிற்கு சாதுவாகவும், சில நேரத்தில் நமக்கு மாலை
அணிவித்து மரியாதை செய்வதும், சில நேரத்தில் மதம் பிடித்து கட்டற்று
செல்வது போலவும், இந்தியா.............( அப்பாவும் பிள்ளையும் பிரானிகளின் நேசர்களாய் இருப்பார்கள் போல் உள்ளது. தமயன் யானையை பற்றி பேசுகிறார், அப்பா பாராளுமன்றத்தில்
சமர்ப்பித்த பட்ஜெட்டிலே.................).

மொத்தத்தில் இந்திய அரசியல் வானில் எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாய் மின்னப்போகும் ஒருவரை நேரில் கண்ட மகிழ்ச்சி எனக்கு.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

No comments: